ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தை விட்டு வெளியே வரக் கூடாதுனு அழுத்தம் கொடுத்தாங்க! பாமக எம்எல்ஏ அருள்
சேலம்: அன்புமணியை சுற்றி எத்தனை தீயசக்திகள் இருக்கிறார்கள் என்பதை நான் பட்டியலிடட்டுமா என பாமக எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பியுள்ளார். ராமதாஸை சுற்றி 3 தீயசக்திகள் இருக்கின்றன என அன்புமணி கூறியதற்கு அருள் பதிலடி கொடுத்துள்ளார்.
2 ஆண்டுகளாக தைலாபுரம் தோட்டத்தை விட்டு ராமதாஸ் வெளியே வரக் கூடாது என அழுத்தம் தந்தனர் என்றும் அருள் கடுமையாக விமர்சித்துள்ளார். அதே வேளையில் அன்புமணியை போல் நல்ல மனிதரை பார்க்கவே முடியாது என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சேலத்தில் எம்எல்ஏ அருள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ். எம்எல்ஏ உள்ளிட்ட எந்த பதவிகளுக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ்.
நான் 36 ஆண்டுகளாக ராமதாஸுடன் பயணித்து வருகிறேன். பாட்டாளி வர்க்கத்தை அன்புமணி அவமானப்படுத்திவிட்டார். பாமகவுக்கு தாய் இயக்கம் இல்லை, தாய்தான் இருக்கிறார். அது மருத்துவர் ராமதாஸ்.
ராமதாஸ்தான் பாமக இயக்கத்திற்கு தாய், அவர் சுயம்புவாக கட்சியை வளர்த்தவர். அதே வேளையில் எங்கள் முதல்வர் வேட்பாளர் அன்புமணிதான் என சொல்லிவிட்ட பிறகு வேறு என்ன வேண்டும்? ராமதாஸுக்கு இழிவு ஏற்படும் போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.
ராமதாஸை சுற்றி 3 தீயசக்திகள் இருப்பதாக அன்புமணி சொல்கிறார். ஆனால் அன்புமணியை சுற்றியிருக்கும் தீயசக்திகளை நான் பட்டியலிடவா? பாமகவில் யார் மீது குற்ற வழக்குகள் இல்லை, போராட்ட வழக்குகளே உள்ளன.
25 ஆண்டுகளாக பாமக தலைவராக உள்ளவர் ஜி.கே.மணி. அவரை ஒரு முறை ராமதாஸ் அழைத்து, தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்கலாம் என இருக்கிறேன் என்றார். உடனே ஜி.கே.மணியும் மிகவும் மகிழ்ச்சியாக ஒதுங்கிக் கொண்டு அன்புமணியை தலைவராக முன்மொழிந்தார். இவ்வாறு அருள் தெரிவித்துள்ளார்.
பாமக சமூக ஊடகப்பிரிவு கூட்டத்தில் நேற்று அன்புமணி பேசுகையில் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராமதாஸ் கூறிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன். விசிகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி!
திமுகதான் பாமகவின் எதிரி! திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தற்போது ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. என்றைக்காவது ஒரு நாள் ராமதாஸை விசிக தலைவர் திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார்?
விசிகவின் வன்னியரசு, ரவிக்குமார், சிந்தனைச் செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. சி.வி.சண்முரம் தைலாபுரம் வருகை குறித்து நான் கேட்ட போது அவர் பத்திரிகை வைப்பதற்காக வந்தார் என ராமதாஸ் கூறினார்.
ஐயா தற்போது ஐயாவாக இல்லை. அவருடன் இருக்கும் 3 பேர் சுயலாபத்திற்கு அவரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அவர் வயது முதிர்வின் காரணமாக குழந்தையாக மாறிவிட்டார். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications