சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா! பாமக எம்.எல்.ஏ.க்கள் பாதியில் வெளியேற இது தான் காரணம்!
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பாதியில் வெளியேறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எங்கும் சர்ச்சை எதிலும் சர்ச்சை என்பதை போல் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது கவனிக்கத்தக்கது. இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது என்பது பற்றி அதில் கலந்துகொண்டு வெளியேறிய சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருளிடம் பேசினோம்.

அவர் நம்மிடம் கூறியதாவது, ''பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பு நேற்றிரவு வரை எனக்கு வரவில்லை. இத்தனைக்கும் எனது மேற்கு தொகுதிக்குள் தான் பல்கலைக்கழகம் இருக்கின்றது. இன்று என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, திடீரென பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டமளிப்பு விழாவுக்கு அவசியம் வரவேண்டும் என வற்புறுத்தி அழைத்தார்.''
''எனது தொகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பட்டம் பெறுவதால் சரி கலந்துகொள்ளலாம் என முடிவெடுத்து ஈகோ பார்க்காமல் பட்டமளிப்பு விழாவுக்கு சென்றேன். அதேபோல் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவமும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். நாங்கள் இருவரும் சென்ற போது, துணைவேந்தர் சரியாக முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. வேண்டாத விருந்தாளியாக பார்த்தார்.''
''இதனிடையே சேலம் மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ளதால் ஆளுநர் ரவிக்கு சால்வை அணிவிக்க விரும்பிய மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் அது குறித்து கேட்டிருக்கிறார். அதற்கும் பட்டமளிப்பு விழா ஏற்பாட்டாளர்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இதனால் இனியும் இங்கே இருப்பது மரியாதையற்றது என நினைத்த நான் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டேன். மேட்டூர் தொகுதி பாமக எல்.எல்.ஏ. சதாசிவம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நேரடியாகவே தனது வருத்தத்தை தெரிவித்துவிட்டு புறப்பட்டுவிட்டார்.'' இவ்வாறு பாமக எம்.எல்.ஏ. அருள் கூறினார்.
இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஏராளமான சர்ச்சைகளும் புகார்களும் இதுவரை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications