கருப்பு உடை கூடாதுன்னு சொன்னது யார்? பெரியார் பல்கலை. துணைவேந்தர், பதிவாளர் மீது போலீஸில் புகார்
சேலம்: பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை விட்டிருந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் கொடுத்து வருகிறார். ஆளுநருக்கும், தமிழக அரசு மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் அவ்வப்போது சில சலசலப்புகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் நோக்கில் இந்நிகழ்வுகளுக்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் பிரச்னைகள் தவிர்க்க முடியாததாக எழுந்துவிடுகிறது.

சமீபத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் 300 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டத்தை வழங்கினர். அன்றைய தினம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த ஆளுநருக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பல்கலையில் பயின்று வந்த இடதுசாரி மாணவர் சங்கத்தின் (SFI) மாநில நிர்வாகி அரவிந்த்சாமியும் இவ்விழாவில் பங்கேற்றிருந்தார்.
ஆனால் காவல்துறையினர் இவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஆளுநர் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறும் வரை தனியாக அடைத்து வைத்திருக்கின்றனர். இது மாணவர்களிடையே சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இப்படியாக ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் காவல்துறை தொடர்ந்து கறார் தன்மையை காட்டி வருகிறது.
இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு உடையை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியிருந்ததாக பல்கலைக்கழகம் சார்பில் அறிக்கை வெளியாகியிருந்தது.
ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 27, 2023
பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்.@DistSalem pic.twitter.com/QYw9Q39i1x
இந்த அறிக்கையில், "பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறவிருக்கிறது. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கும் அனைவரும் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவர வேண்டும். அதே சமயம் கைப்பேசிகள் எடுத்துவருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சேலம் மாவட்டக் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலின் கையெழுத்தும் இருந்தது.
இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கையில், தனக்கு எதுவும் தெரியாது என்றும், "சேலம் மாநகரக் காவல் ஆணையர் பல்கலைக்கழகத்தை வந்து பார்வையிட்டுவிட்டு இதுபோன்று அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறினார். எனவேதான் இப்படி அறிக்கை வெளியிடப்பட்டது" என்றும் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் இதனை மறுத்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் "ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்" என்று எழுதி ட்வீட் செய்திருந்தார். பல்வேறு அரசியல் தலைவர்களும் சுற்றறிக்கை குறித்து கேள்வியெழுப்ப தொடங்கினர்.
இந்நிலையில், காவல்துறையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications