"திமுக அரசு மீது ஒரே ஒரு குற்றச்சாட்டுதான்!" ஸ்டாலின் முன்பே பிரேமலதா பேச பேச! சேலத்தில் சலசலப்பு!
சேலம்: ஸ்டாலின் அரசு மீது ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் என அவர் முன்பே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்தும் போதை பொருள் புழக்கம் குறித்தும் அவர் முதல்வர் ஸ்டாலின் முன்பே சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையிலேயே மேடையில் பேசிய அவர், ஆட்சியின் மீதான தனது விமர்சனத்தையும், அதே சமயம் முதல்வரின் மீதான நம்பிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்தினார்.

அவர் பேசுகையில், ஒரு பெண் எப்போது நடுராத்திரியில் தனியாக பத்திரமாக வீடு போய் சேர்க்கிறாரோ அதுதான் உண்மையான சுநதந்திரம் என காந்தியடிகள் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுக்க ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் உள்ளது. அதாவது பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் ஆகிய இரண்டுதான். இதை தவிர திமுக மீது வேறு என்ன சொல்ல முடியும்?
திமுக கூட்டணியில் அண்ணனின் வலதுகரமாக தேமுதிக இணைந்துள்ளது. எனவே பெண்களுக்கு ஏதாவது என்றால் தங்கை என்ற முறையில் அண்ணனிடம் உரிமையாக நான் கேட்பேன், எல்லா இடங்களிலும் சிசிடிவி நிறுவி, பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள் என கேட்டால் அண்ணன் உருவாக்கித் தருவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லை, போதை தலைவிரித்தாடுகிறது, சட்டம் ஒழுங்கு சரியில்லை என அதிமுக, பாஜக, பாமக அன்புமணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறை சொல்லி வருகிறார்கள். ஆனால் ஸ்டாலின் முன்பு பிரேமலதா பெண் பாதுகாப்பு குறித்து பேசியிருந்தது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வப்போது அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதையேதான் பிரேமலதாவும் "ஒரே ஒரு குற்றச்சாட்டு" என்று சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது எந்த ஒரு அரசுக்கும் ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. தமிழக அரசு "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும், கள யதார்த்தத்தில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
பிரேமலதா விஜயகாந்தின் பேச்சு, கூட்டணியில் இருந்தாலும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஒரு துணிச்சலான போக்கைக் காட்டியது. அதே நேரத்தில், திராவிடப் பாரம்பரியத்தைக் காக்கப் பெண்கள் அனைவரும் 'வேலு நாச்சியாராக' மாற வேண்டும் என்ற அழைப்பு, அரசியல் ரீதியாகப் பெண் ஓட்டுக்களைக் கவரும் ஒரு முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
திமுக அரசு பெண்களுக்குப் பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்தாலும், பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் பார்வையாக உள்ளது.














Click it and Unblock the Notifications