சேலத்தில் 7 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த மளிகை கடைக்காரர் கைது
சேலம்: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தற்காக மளிகைக் கடைக்காரர் ஒருவரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் அல்லிக்குட்டை வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்த 42 வயது ராமநாதன், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மிட்டாய் வாங்க தனது கடைக்கு வந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகச் சொல்லப் படுகிறது.
மேலும், கடையில் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என அச்சிறுமியை மிரட்டியும் உள்ளார். ஆனால், நேற்று அச்சிறுமி நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆவேசமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் ராமநாதனின் மளிகை கடையை முற்றுகையிட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் ராமநாதனை பிடித்து வீராணம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர் மீது புகாரளித்தனர்.
இதற்கிடையில் ராமநாதனை போலீசார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். தகவல் அறிந்த அல்லிக்குட்டை பொதுமக்கள், புகாரை வீராணம் போலீசாரே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் எனக் கூறி வீராணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராமநாதனை கைது செய்தனர்.