கூட்டணி ஆட்சி.. அமித்ஷாவின் பேச்சுக்கு இதுதான் அர்த்தம்! அண்ணாமலைக்கு பாடம் எடுத்த ராஜேந்திர பாலாஜி
சேலம்: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசிய அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு அதிமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக எதிர்க்கட்சியாகவும் அமைந்ததை போன்ற சூழல் மீண்டும் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். இந்த கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பேசி வருகிறார். ஆனால் பாஜக தரப்பில் தொடர்ச்சியாகக் கூட்டணி ஆட்சி என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அண்ணாமலை பேசுகையில், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றிக் கூற முடியும்? அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறி இருக்கிறார். நயினார் நாகேந்திரனும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்று கூறினாலும், கூட்டணி ஆட்சி என்பதையே கூறி வருகிறார்.
இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது. இந்த நிலையில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், அமித்ஷா தனது பாணியில் கூட்டணி ஆட்சி என்று என்டிஏ கூட்டணியின் ஆட்சி எனத் தெரிவித்திருக்கிறார். அவர் கூட்டணி அரசாங்கம் என்று கூறவில்லை. எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று கூறிவிட்டார்.
அதேபோல் ஆட்சிக்கு வருவதற்கு அந்தந்த கட்சிக்கு பலம் இருக்க வேண்டும். அந்த பலம் அதிமுகவிடம் தான் இருக்கிறது. எந்த காலத்திலும் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. அதிமுக தான் தமிழ்நாட்டில் என்டிஏ தலைமை என்று கூறிவிட்டார்.
அதிமுக - பாஜக கூட்டணி ஆளுங்கட்சியாக வரப் போகிறது. அதேபோல் எதிர்க்கட்சியாகவும் அதிமுக - பாஜக கூட்டணிதான் வரப் போகிறது. எப்படி 2011 அதிமுக - தேமுதிக இணைந்து போட்டியிட்ட போது, அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்க்கட்சியாக வந்ததோ, அப்படியான சூழல் மீண்டும் உருவாகும். இதற்கு நடுவில் சந்தில் சிந்து பாடுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்.
யாரின் கருத்தையும் யாரும் கேட்கத் தயாராகவில்லை. மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். இரு கட்சிகளின் தலைவர்களும் பேசிவிட்ட பின், என் கருத்தைக் கேட்கவில்லை என்று யாரும் பேசக் கூடாது. தெளிந்த நீரோடையில் கல்லெறியும் வேலையை செய்யாதீர்கள். அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையில் மக்கள் மத்தியில் மரியாதை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications