2029 பாஜக ஆட்சியில் ராம ராஜ்ஜியம்.. மகாத்மா காந்தியின் கனவு அது.. அண்ணாமலை நம்பிக்கை!
சேலம்: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2029ம் ஆண்டு ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடந்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்ற நிலை இருந்த நேரத்தில், கடந்த 8 ஆண்டுகளில் விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நம்பிக்கை ஊட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் கிசான் நிதி தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காத்துவாக்குல 2 மோதல்.. பாஜகவின் ஆபரேசன்
அத்திக்கடவு - அவினாசி திட்டம்
இந்திய அளவில் விவசாயம் சாா்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. 21 பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டம் மத்திய அரசின் ரூ. 1,000 கோடி பங்களிப்புடன் தொடங்கி 96 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், கடந்த 15 மாதங்களாக திமுக ஆட்சியில் 1.கி.மீ. தூரத்திற்கு குழாய்போட முடியாமல் திட்டம் அப்படியே நிற்கிறது.
இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம் இந்தியாவில் தொடங்கி விட்டது. சிக்கிமில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் உள்ளது. இந்திய அளவில் 15 மாநிலங்கள் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்தவில்லை. இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பி உள்ளோம்.
பாஜக ஆட்சி
2024ம் ஆண்டு இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும். அப்போது நகரத்தில் உள்ள மக்கள் மீண்டும் கிராமங்களை நோக்கி நகர்வார்கள். 2029ல் இருந்து 2034ல் பாஜக ஆட்சியமைக்கும் போது தான் இந்தியாவில் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும். இந்தியாவில் ராம ராஜ்ஜியம் அமைக்கப்பட வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு.
Recommended Video
ராம ராஜ்ஜியம்
ராம ராஜ்ஜியம் என்பது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். இல்லை என்ற நிலை யாருக்கும் இருக்கக் கூடாது. இதனால் ராம ராஜ்ஜியம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைக்கப்படும். தமிழ்நாட்டிலும் பாஜக இருக்கப் போகிறது என்று தெரிவித்தார்.