ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம்..ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் குற்றச்சாட்டுக்கு ஈபிஎஸ் பரபர பதில்
சேலம்: ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம் வெளியிட உள்ளதாக கூறிய நிலையில் அதற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கத்துடன் பரபரப்பாக பதில் அளித்துள்ளார்.
சேலத்தில் இன்று அதிமுக வளர்ச்சி பணி குறித்து முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எய்ம்ஸ் பற்றி குரல் எழுப்பாத திமுக
தமிழகத்தில் 38 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும் நாடாளுமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஏன் விவாதிக்கவில்லை. ஏன் குரல் எழுப்பவில்லை. கடந்த காலத்தில் கூட்டணியில் இருந்தாலும் கூட அதிமுக உறுப்பினர்கள் காவேரி பிரச்சனைக்காக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி நாடாளுமன்ற அவையை ஒத்திவைக்கும் அளவுக்கு குரல் எழுப்பினோம்.

மத்திய அரசுக்கு அழுத்தம்
ஆனால் இன்றைய ஆளும் கட்சியான திமுக எய்ம்ஸ் மருத்துவமனை பணி தொடர்பாக ஏன் குரல் கொடுக்கவில்லை என்பது தான் எங்களின் கேள்வி. எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் துவங்க வேண்டும் என அதிமுக சார்பில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பூர்வாங்க பணி முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொடநாடு வழக்கில் அவதூறு
கொடநாடு கொலை வழக்கில் அதிமுக பற்றி அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. காலம் கடத்துவதற்காகவே கொடநாடு கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிமுக கட்சி சிறப்பாக செயல்படுகிறது. அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி கட்சி செயல்பட்டு வருகிறது.

ஜேசிடி பிரபாகர் மீது விமர்சனம்
அதிமுக வேஷ்டி கட்டுபவரே அதிமுகவினர். கட்சி விட்டு மாறுபவர்தான் ஜேடிபி.பிரபாகரன். ஜேசிடி பிரபாகர் கட்சி வேஷ்டியை இன்னும் கட்டவில்லை. அவர் அதிமுக கட்சியை சேர்ந்தவர் இல்லை. பல கட்சிக்கு சென்று வந்தவர். வேடந்தாங்கல் பறவைகள் போல் சீசனுக்கு சீசன் கட்சி மாறி வருபவர் தான் ஜேசிடி பிரபாகர். ரூ.41 ஆயிரம் கோடி எப்படி எங்கிருந்து கொள்ளையடிச்சோம்?. இப்போது கூட என்மீது வழக்கு போட்டனர். உச்சநீதிமன்ற விசாரணையில் வழக்கை திரும்ப பெறுவதாக திமுக ஆர்எஸ் பாரதி கூறினார். வழக்கை நடத்தி ஆக வேண்டும் என கூறியுள்ளேன். ஏனென்றால் என் மீது போடப்பட்ட வழக்கு என்பது அவதூறானது.

ஜேசிடி பிரபாகர் கூறியது என்ன?
முன்னதாக ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர், ‛‛முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக திமுக தரப்போடு ரகசிய பேரம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் யார் என்ற பட்டியலை விரைவில் நாங்கள் அம்பலப்படுத்துவோம். ஓ பன்னீர் செல்வம் அனுமதி அளித்தால் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன்'' எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தான் ரூ.41 ஆயிரம் கோடி என்ன என்பது பற்றிய விவாதம் அரசியல் களத்தில் விவாதத்துக்குள்ளாகி உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications