காரில் டீசல் கூட இல்லையா? கடுப்பாகி நடந்தே சென்ற சேலம் பெண் கலெக்டர்.. அலறிய டிரைவர்- உதவியாளர்
சேலம்: இரவு நேரத்தில் அலுவல் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றபோது கார் டீசல் இன்றி நடுரோட்டில் நின்றது. இதனால் கடுப்பாகி போன சேலம் கலெக்டர் பிருந்தா தேவி நடந்து போன நிலையில் டிரைவர், உதவியாளர் அவரை சமாதானம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரி என்பவர் கலெக்டர்(மாவட்ட ஆட்சியர்) தான். மாவட்டத்தில் எந்த பிரச்சனை நடந்தாலும் கூட முதல் கேள்வி என்பது கலெக்டருக்கு தான் செல்லும். இதனால் 24 மணிநேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டிய பொறுப்பு கலெக்டருக்கு உள்ளது.

அதேபோல் கலெக்டரின் உதவியாளர்கள், டிரைவர்களும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தற்போது லோக்சபா தேர்தல் வேளை என்பதால் கலெக்டர்கள் தான் ஒவ்வொரு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்படுகின்றனர். இவர்கள் மாவட்டத்தில் மக்கள் பிரச்சனை மட்டுமின்றி, தேர்தல் பணிகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும்.
இந்நிலையில் தான் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி இரவு நேரத்தில் அலுவல் பணிகளை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். டிரைவர் மற்றும் உதவியாளர் அவருடன் காரில் பயணித்தனர். அப்போது திடீரென்று கார் நடுரோட்டில் நின்றது. டீசல் இல்லாததால் கார் நின்றுபோனது.
இதனால் கலெக்டர் பிருந்தா தேவி கடுப்பானார். காரை எடுக்கும் முன்பு டீசல் இருக்கிறதா? இல்லையா? என்பதை ‛செக்' செய்ய மாட்டீர்களா? என கடிந்ததாக கூறப்படுகிறது. மேலும் டென்ஷனான அவர் காரை விட்டு இறங்கி சாலையில் நடந்து சென்றார். இதனால் உதவியாளர் மற்றும் டிரைவர் ஷாக்காகி போயினர். இருவரும் கலெக்டர் பிருந்தா தேவியை சமாதானம் செய்து மீண்டும் காருக்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு டீசல் நிரப்பி காரில் புறப்பட்டு சென்றனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது. சேலம் கலெக்டராக உள்ள பிருந்தா தேவி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்தார். 2019ம் ஆண்டில் அவர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். டான்மேக் நிர்வாக இயக்குநராக சிலகாலம் சேலத்தில் பணியாற்றினார். அதன்பிறகு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநராக செயல்பட்டார்.
இதையடுத்து கடந்த ஆண்டு சேலம் கலெக்டராக இருந்த கார்மேகம் பணி இடமாறுதல் செய்யப்பட்டார். கார்மேகத்துக்கு பதிலாக பிருந்தா தேவி சேலம் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் பொறுப்பேற்றார். இதன்மூலம் சேலம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற 2வது பெண் என்ற பெயரை பெற்றார். இதற்கு முன்பு ரோகிணி என்பவர் சேலத்தின் முதல் பெண் கலெக்டராக செயல்பட்டார். தற்போது கலெக்டர் பணியோடு சேலம் லோக்சபா தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக பிருந்தா தேவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications