"செமை"யாக மாறப் போகும் சேலம்… புதிதாக 3 பஸ் நிலையங்களை அமைக்கத் திட்டம்!!
சேலம்: சேலம் மாநகரம் புதுப் பொலிவு பெறப் போகிறது. கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சேலம் நகரில் மேலும் 3 புதிய பேருந்து நிலையங்களை அமைக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த 3 பேருந்து நிலையங்களையும் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாம்.
தற்போது 2 பேருநது நிலையங்களைக் கொண்டுள்ள சேலம் நகரம், புதிய பேருந்து நிலையங்கள் வந்ததும் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழசு.. புதுசு
சேலத்தில் தற்போது பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன.

நகரப் பேருந்து.. வெளியூர் பேருந்து
பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கான பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.

போதாது போதாது
ஆனால் இதனால் போக்குவரத்து நெருக்கடி தீரவில்லை. மாறாக அதிகரித்தபடியே உள்ளது.

3 புதிய பேருந்து நிலையங்கள்
இதையடுத்து நெருக்கடியைக் குறைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதற்காக பெங்களூரைச் சேர்ந்த ஒரு அமைப்பு ஆய்வில் ஈடுபட்டது. அந்த அமைப்பு தற்போது சேலத்தில் 3 புதிய பேருந்து நிலையங்களை அமைக்குமாறு அரசுக்குப் பரிந்துரை கொடுத்துள்ளதாம்.

சீலநாயக்கன்பட்டி – கருப்பூர் – அயோத்தியாபட்டணம்
சீலநாயக்கன்பட்டி, கருப்பூர், அயோத்தியாபட்டணம் ஆகிய இடங்களில் இதை அமைக்கலாம் என்றும் அது ஆலோசனை கூறியுள்ளதாம்.

கொங்குப் பேருந்துகள் சீலநாயக்கன்பட்டியிலிருந்து
இதில் சீலநாயக்கன்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு, பவானி, ராசிபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னை பேருந்துகளுக்கு அயோத்தியாபட்டணம்
ஏற்காடு, ஆத்தூர், சென்னை, விழுப்புரம், அரூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளை அயோத்தியாபட்டணம் நிலையத்தில் இருந்து இயக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

பெங்களூர் பேருந்துகளுக்கு கருப்பூர்
தர்மபுரி, மேட்டூர், ஜலகண்டாபுரம், பெங்களுர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளை கருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

10 ஆண்டுகளுக்குள்
இந்த பேருந்து நிலையங்களை 10 ஆண்டுகளுக்குள் அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications