ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியை பழிவாங்க.. கணவனின் பலே திட்டம்.. கோர்ட்டுக்கு வந்த 11 மூட்டைகள்
சேலம்: விவாகரத்து பெற்ற மனைவிக்கு வழங்க வேண்டிய ஜீவனாம்சம் தொகை ரூ 2 லட்சத்தை ரூ 10 நாணயங்களாக கணவர் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி நீதிமன்றத்திற்கு 11 மூட்டைகளில் ரூ 10 நாணயங்களை கொண்டு வந்தார். தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி கிடையூர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் மனைவி சாந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். எனவே மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஜீவானாம்சம் வழங்கக் கோரி சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் 2009 ஆம் ஆண்டு சாந்தி வழக்கு தொடர்ந்தார்.

சாந்திக்கு மாதந்தோறும் ரூ 3 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கி வந்த நிலையில் வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் தீர்ப்பு வெளியான நாள் வரையிலான காலக்கட்டத்திற்கும் கணக்கிட்டு ஜீவனாம்சம் தொகை வழங்க வேண்டும் என சாந்தி மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் சாந்திக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது ரூ 2.18 லட்சம் வழங்க நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராஜி, தனது முன்னாள் மனைவியை எந்த வகையிலாவது பழி வாங்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அதனால் தமக்கு எந்த சிக்கலும் வரக் கூடாது என கருதியிருந்தார்.
இதையடுத்து தீவிர யோசனைக்கு பின்னர் ரூ 2 லட்சம் ஜீவனாம்சத்தை ரூ 10 நாணயங்களாக வழங்க முடிவு செய்தார். அதன்படி ரூ 2 லட்சத்தை ரூ 10 நாணயங்களாக மாற்றி 11 மூட்டைகளாக சங்ககிரி நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். அங்கு நீதிபதியிடம் 11 மூட்டைகளையும் ஒப்படைத்தார்.
இதை கண்ட சாந்தி அதிர்ச்சி அடைந்தார். சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளப்படாததால் 11 மூட்டைகளில் வந்த ரூ 10 நாணயங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது, அவற்றை நோட்டுகளாக எப்படி மாற்றுவது என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தனது வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஒரு வேளை இந்த 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்கவில்லை என்றால் இதை கணவரிடமே கொடுத்துவிட்டு நோட்டுகளாக வாங்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நீதிமன்றத்தில் முன் வைப்பார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications