நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. விஷம் குடித்த சேலம் மாணவர் சிகிச்சை பலனின்றி பலி
சேலம்: நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்த சேலம் மாணவர் சுபாஷ் சந்திரபோஸ் இன்று சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 3,682 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.
இந்த தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 16.14 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் போது மகாராஷ்டிராவில் உள்ள தேர்வு மையத்தில் இரண்டு மாணவர்களின் ஓஎம்ஆர் ஷீட்டுகள் மாறியதாக புகார் எழுந்தது.

மும்பை உயர்நீதிமன்றம்
இதையடுத்து நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளித்தது. இதனால் கடந்த 1ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

நுழைவு தேர்வு
மருத்துவ சேர்க்கைக்கான நுழைவு தேர்வு என்பதால் இந்த தேர்வு முடிவுகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விரைவில் மருத்துவ சேர்க்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

நீட் தேர்வு
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமாரை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுபாஷ் சந்திரபோஸ் (20). இவர் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வை சேலம் சின்னதிருப்பதியில் உள்ள குமாரசாமிப்பட்டி ஜெய்ராம் பள்ளியில் எழுதியுள்ளார். இந்த நிலையில் தனது லட்சியமாக மருத்துவ படிப்பில் சேரவுள்ளோம் என்ற ஆர்வமாக சுபாஷ் இருந்துள்ளதாக தெரிகிறது.

விஷம் குடித்த மாணவர்
இதையடுத்து கடந்த 1ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அப்போது அந்த மாணவர் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுபாஷ் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சுபாஷை அவரது பெற்றோர் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

5 நாட்கள் தொடர் சிகிச்சை
அவருக்கு 5 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சுபாஷ் சந்திரபோஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு விஷயத்தில் மாணவர்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என அரசும், சமூக ஆர்வலர்களும் உளவியல் நிபுணர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள். நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன தைரியத்தை வரவழைக்க தமிழக அரசு சார்பில் கவுன்சலிங்கும் கொடுக்கப்பட்டது. எனினும் இது போல் மாணவர்களின் தற்கொலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே மாணவர்களின் உயிரையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications