சேலம்: ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் கறுப்பு கொடி காட்டி போராட்டம்-பரபரப்பு!
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தலைமையில் பெரியார் இயக்கங்கள், விசிக, இடதுசாரிகள், தவாக சார்பாக கறுப்பு கொடி காட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் பல்கலைக் கழகத்தின் வேந்தராகிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

இதனிடையே சனாதனம் தொடர்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசியும் பரப்பி வரும் ஆளுநர் ரவியைக் கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம் அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்பதால் இது ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கமாக மாறியது. திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை இந்தப் போராட்டத்தில் பங்கேர்பதாக அறிவித்தன.
இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணியளவில் சேலம் பல்கலைக் கழகத்துக்கு ஆளுநர் ரவி வருகை தந்தார். அப்போது நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு, கைகளில் கட்சி கொடியும் கறுப்பு கொடியும் ஏந்திய படி ஆளுநர் ரவிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது சிலர் போலீசார் தடுப்புகளை மீறவும் முயற்சித்தனர். பின்னர் கறுப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கொளத்தூர் மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். இதனால் சேலத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
முன்னதாக சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கறுப்பு அடை அணியக் கூடாது என திடீரென ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலால் கறுப்பு உடைக்கு தடை விதிப்பதாக பெரியார் பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் போலீஸ் தரப்பு இதனை மறுத்திருந்தது. இதனால் பெரியார் பல்கலைக் கழக நிர்வாகம் தமது கறுப்பு உடை தடைக்கான அறிவிக்கையை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications