அடேங்கப்பா அதிரடி... சேலத்தில் கூண்டோடு ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்.. வேட்டை தொடருமாம்
சேலம்: சேலம் மாநகர பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை தொடரும் என சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் எச்சரித்துள்ளார்.
சேலம் மாநகர் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் அச்சம் இன்றி வாழவும் மாநகர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இதனடிப்படையில் சேலம் மாநகர காவல்துறையினர் நேற்று இரவு மேற்கொண்ட அதிரடி சோதனையில் மாநகர பகுதியில் சுற்றித்திரிந்த 35க்கும் மேற்பட்ட ரவுடிகள் அதிரடியாக கைது செய்யபட்டனர்.
கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது அந்தந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சேலம் மாநகரம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர் குற்றவாளிகளாக இருந்து வரும் ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர பகுதிகளில் ரவுடிகள் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் கைது செய்யப்பட்டு அவர்கள் மத்திய சிறையில் அடைப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. தற்போது மாநகர காவல்துறை ஆணையரின் இந்த அதிரடி தொடர் நடவடிக்கையின் காரணமாக சக ரவுடிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சேலத்தில் ஒரே சமயத்தில் 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications