டிரிபிள்ஸ் வந்த "கேங்க்".. கேள்வி கேட்ட காவலர் மீது கொலைவெறி தாக்குதல்.. சேலத்தில் பயங்கரம்
சேலம்: சேலத்தில் ஒரே பைக்கில் வந்த 3 புள்ளிங்கோ இளைஞர்களை தட்டிக் கேட்ட போலீஸ் காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான காவலர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவலரை தாக்கியவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
காவலர் என்று கூட பாராமல் இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடம் மாறும் தலைமுறை..
கடந்த காலங்களை ஒப்பிடுகையில், இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலர் மிக மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். சினிமா, பொழுதுபோக்கு, செல்போன் ஆகியவை மட்டுமே அவர்களின் வாழ்க்கையாக மாறிப் போயுள்ளது. இவ்வாறு வாழ்க்கையில் எந்தவித லட்சியமும் இல்லாமலும், அன்றைய நாள் கழிந்தால் போதும் என்ற மனநிலையிலும் இருக்கும் இளைஞர்களை மது, கஞ்சா போன்ற போதை வஸ்துகள் எளிதில் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதுதான் அவர்களை சமூக விரோதிகளாகவும், கூலிப்படையினராகவும் மாற்றி விடுகிறது. இதுபோல தடம் மாறி, கடைசியில் தங்கள் வாழ்க்கையையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் இளைஞர்களை இப்போது அடிக்கடி பார்க்க முடிகிறது. அப்படியொரு சம்பவம்தான் சேலத்தில் நடந்துள்ளது.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அசோக். இவர் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சிக்கு சென்றுவிட்டு அஸ்தம்பட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சின்னதிருப்பதி பகுதியில் ஒரே மோட்டார் சைக்கிளில் 19 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் வேகமாகவும், வளைந்து நெளிந்தும் பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும் சென்று கொண்டிருந்தது.

கேள்விக்கேட்ட காவலர்..
இதை பார்த்த காவலர் அசோக், அவர்களின் மோட்டார் சைக்கிளை மறித்து நின்றார். பின்னர் அந்த இளைஞர்களிடம், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வதே சட்டப்படி குற்றம்.. அதுவும் ஆள்நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இவ்வளவு வேகமாக செல்கிறீர்களே என காவலர் அசோக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

கொலைவெறி தாக்குதல்
அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞர், திடீரென காவலர் அசோக்கை தாக்க தொடங்கினார். எனினும், சுதாரித்துக் கொண்ட அசோக், அவரிடம் இருந்து விலகிச் சென்றார். ஆனால் அந்த இளைஞர்கள் காவலர் அசோக்கை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதனால் பயந்துபோன அசோக், அங்கிருந்து ஓடினார். ஆனால் அந்த இளைஞர்களும், அந்தப் பகுதியில் இருந்த அவரது நண்பர்களும் என சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காவலர் அசோக்கை மடக்கி பிடித்து கல், உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கினர்.

கைது நடவடிக்கை
இதில் படுகாயமடைந்த அசோக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே, சிசிடிவி காட்சி அடிப்படையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications