ரயில் பாத்ரூம்களில் இப்படி எல்லாமா செய்வாங்க.. ஆடிப்போன சேலம் ரயில்வே அதிகாரிகள்.. அதிரடி உத்தரவு
சேலம்: ரயில் பாத்ரூம்களில் இப்படி எல்லாமா செய்வாங்க என்பது போல் சம்பவங்கள் நடக்க தொடங்கி உள்ளது. ரயில் கழிவறைகளில் பயணிகள் குளிக்க தொடங்கி உள்ளார்கள். இதை கேட்டு ஆடிப்போன ரயில்வே நிர்வாகம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் ரயில்களில் குளிக்க கூடாது என்றும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் பயணிப்போர் ரயில்களிலேயே குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதனால் பலருக்கு கழிவறை செல்லக்கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் ரயில் பெட்டிகளில் பல சமயங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. பயணிகள் தண்ணீர் கேட்டு ரயிலின் அபாய சங்கலியை பிடித்து நிறுத்துவதும் நடக்கிறது. இந்த சம்பவங்களை தவிர்க்க விரும்பும் ரயில்வே முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரயில் பெட்டிகளில் வழங்கப்படும் தண்ணீர், கழிவறைகளில் பயன்படுத்துவதற்கும், பொது பயன்பாட்டிற்கும் மட்டுமே. அந்த நீரை குளிப்பதற்கு பயன்படுத்துவதால் சக பயணிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமம் ஏற்படுகிறது. மேலும் கழிவறைகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும். இது பெட்டியில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்கும் மேலும் தவிர்க்க முடியாத புகார்களுக்கு வழிவகுக்கலாம். மேலும் ரயில்களை சரியான நேரத்தில் இயக்குவதில் தாமதம் ஏற்படலாம். எனவே ரயில் பெட்டிகளில் உள்ள தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டாம்.
பெட்டிகளில் வழங்கப்படும் தண்ணீரை வீணாக்க கூடாது. பயணிகளின் மத உணர்வுகளுக்கு ரயில்வே மதிப்பளிக்கும். அதே வேளையில், அவர்களின் எந்தச் செயலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தவோ கூடாது.
கற்பூரம் அல்லது வேறு ஏதேனும் திறந்த தீபம், நெருப்பை ஏற்றுவது ரயில்களிலும், ரயில் நிலைய வளாகங்களிலும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. தீ தொடர்பான விபத்துகளை தடுக்கவும், அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் ரயில்வே நிர்வாகம் விரும்புகிறது.
எனவே, பயணிகள் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை வைத்திருந்தால் ரயில்வே சட்டப்படி தண்டனை விதிக்கப்படும். இதில் ரூ.1000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை ஜெயில் அல்லது இரண்டும் அடங்கும். எனவே பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
மேலும் ஏதேனும் உதவி அல்லது பாதுகாப்பு தொடர்பாக பயணிகள் கட்டணமில்லா ரயில்வே உதவி எண் 139-ஐ அணுகலாம் அல்லது பணியில் இருக்கும் ரயில்வே ஊழியர்களை அணுகலாம். தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது" இவ்வாறு சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications