சேலம், திருப்பூரில் அழவைத்த பச்சை மிளகாய்.. 1 கிலோ விலையை பாருங்க.. பச்சை மிளகாய் படுத்தும் பாடு
சேலம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காய்கறி விலை உயர்ந்து வருகிறது.. இதில், பச்சை மிளகாய் விலை எக்கச்சக்கமாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே 2-வது வாரம் வரை, வெயில் உச்சத்தில் வாட்டி வதைத்து வந்தது.. அதற்கு பிறகு சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்தது..

கோயம்பேடு சந்தை: இந்த சமயங்களில், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துவிட்டது.. எனவே, தக்காளியின் விலையும் கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது.. மழை ஓரளவு குறைந்த நிலையில், தக்காளி விலையும் கிலோ ரூ.27 ஆக குறைந்திருந்தது.
அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பிலிருந்து மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய துவங்கியிருக்கிறது.. கர்நாடகா, ஆந்திரா எல்லையோர பகுதிகளிலும் தொடர் மழைபெய்து வருகிறது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து, விலை மறுபடியும் கிலோ ரூ.50 ஆக உயர்ந்துவிட்டது.. பச்சை மிளகாய் ரூ.65-க்கும், நூக்கல் ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.60, பாகற்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.25-க்கும் விற்கப்பட்டன.
சின்ன வெங்காயம்: இதில், தக்காளி, சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைந்தபடியே உள்ளதால், அவைகளின் விலையும் உயர்ந்தபடியே உள்ளது..
நேற்று முன்தினம், சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ, 45 முதல் 55 ரூபாயாக இருந்த நிலையில், வெளிமார்க்கெட்டில், 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.. தக்காளி வரத்து குறைந்து, சேலம் உழவர் சந்தையில் கிலோ, 60 - 80 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 80 - 90 ரூபாய் வரை விற்கப்பட்டது.
பச்சை மிளகாய்: 90க்கு விற்ற பச்சை மிளகாய் கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.. இதுபோலவே, முருங்கைக்காய் முதல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கோடை மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றின் விலை, கிலோ 100 ரூபாயை தொட்டிருக்கும் நிலையில், தக்காளிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
கோடை மழை பெய்ததால், எப்படியும் காய்கறிகளின் விலை குறையும் என்று நம்பப்பட்ட நிலையில், அதற்கு மாறாக விலைகள் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கவலைக்குள்ளாக்கி வருகிறது.
சேலம் விவசாயிகள்: இதுகுறித்து விவசாயிகள் சொல்லும்போது, கோடை வெயிலில் காப்பாற்றிய தக்காளி செடிகள், அதன்பிறகு பெய்த கோடை மழையால் அழுகி உதிர்ந்துவிட்டன.. இதேபோல கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், போன்றவகளும் பிஞ்சிலேயே சுருண்டுவிட்டன.. கோடை மழைக்கு பிறகு நடவு செய்யப்பட்டுள்ள காய்கறிகள் இன்னும் ஒன்றிரண்டு வாரத்தில் விற்பனைக்கு வரக்கூடும்.. ஆனால், மழை தொடர்ந்தால் காய்கறி விளைச்சலில் மீண்டும் பாதிப்பு ஏற்படலாம்" என்கிறார்கள்.
கடந்த வாரம் திருப்பூரிலும் இப்படித்தான் பச்சை மிளகாய் விலை உயர்ந்து காணப்பட்டது.. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கிலோ, 60 முதல், 70 ரூபாய் விற்ற பச்சை மிளகாய், ஒரு கிலோ 90 முதல், 100 ரூபாயானது. அதாவது ஒரே நாளில் கிலோவுக்கு, 30 ரூபாய் வரை விலை உயர்ந்துவிட்டது..
கலக்கம்: மூட்டை, மூட்டையாக பச்சை மிளகாய் வந்த நிலையில், தற்போது வரத்து குறைவாகவே வருவதாகவும் அதனால்தான், கிலோவுக்கு, 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, சுபமுகூர்த்தம், விசேஷ தினங்களால், விற்பனை அதிகரித்தால், விலை, 120 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் திருப்பூர் விவசாயிகள் அச்சம் தெரிவித்திருந்தனர். தற்போது அதன்படியே, பச்சை மிளகாய் கிலோ 100 ஆக விற்கப்பட்டு வருவது ஏழை, எளிய மக்களை கலங்கடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications