சேலம் டூ பிரயாக்ராஜ்.. ஓசி ரயிலில் கும்பமேளா.. 2000 கிமீ பயணித்து மனைவிக்கு கணவன் தந்த ட்விஸ்ட்
சேலம்: சேலத்தில் மது அருந்த பணம் தராததால் மனைவியிடம் கோபித்துக் கொண்ட கணவன், வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அப்படியே சேலம் ரயில் நிலையத்திற்கு சென்றவர் அங்கிருந்து வடமாநிலம் செல்லும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறியுள்ளார். அந்த ரயில் கும்பமேளா நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்க்கு செல்லும் ரயில் ஆகும். ஓசியிலேயே பிரயாக்ராஜ் வந்தார்.. அங்கிருந்து மனைவிக்கு ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படும் போது, சரியான புரிதல் இருந்தால் அந்த சண்டை உடனே முடிவுக்கு வந்துவிடும். அதேநேரம் இதில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். இதில் தவறு செய்தவர்களை தவறால் பாதிக்கப்பட்டவர்களே விட்டுக்கொடுத்து செல்லும் நிலை பெரும்பாலும் இருக்கிறது. இப்போது சரியாகிவிடுவாள் என்று கணவனும், இப்போது சரியாக விடுவார் என்று மனைவியும் நினைக்கும் அளவிற்குத்தான் பல குடும்பங்களில் பிரச்சனைகள் இருக்கின்றன.

மனைவி மீது கோபம் வந்தால் சிலர் வீட்டைவிட்டே ஓடிப்போவார்கள்.. அப்படி போகும் சிலர், வேறு ஏதாவது ஒரு ஊரில் இருந்து அழைத்து நான் இங்கு வந்திருக்கிறேன்.. திரும்ப வர இத்தனை நாட்கள் ஆகும் என்று கூறுவார்கள்.. அப்படித்தான் சேலத்தை சேர்ந்த இளைஞர் தனது மனைவிக்கு ட்விஸ்ட் கொடுத்துள்ளார். சின்னதா ஒரு சண்டை ஓசி ரயிலில் ஏறி சுமார் 2000 கி மீ தூரம் ஏறி பிரயாக்ராஜ் சென்று கும்பமேளாவிற்கு போய்விட்டார். மனைவியிடம் மறுநாள் போனில் அழைத்து நான் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு மனைவி ஆடிப்போனார்.
சேலம் சின்னக்கடை வீதியை சேர்ந்த சுஷ்மா (39) சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே பேன்சி கடை வைத்துள்ளார். இவருடைய கணவர் ஆனந்தராஜ் (வயது 45). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அனந்தராஜுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். கடந்த பிப்ரவரி 2-ந் தேதி அவர் திடீரென ஆனந்தராஜ் வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை மனைவி சுஷ்மா பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனந்தராஜ் வீட்டை விட்டு போகும் போது, அவரது செல்போனையும் வீட்டில் வைத்துவிட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.
மாயமான ஆனந்தராஜ் கடைசியாக அவரது அண்ணனிடம் தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அதன்பின்னர் ஆனந்தராஜ் யாரிடமும் பேசவில்லையாம். தனது கணவரை காணாததால் சுஷ்மா, கவலை அடைந்ததுடன், சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக தான் சென்று இருப்பதாகவும், அதனால் தன்னை தேட வேண்டாம் எனவும் மனைவியிடம் வேறு ஒரு செல்போன் எண்ணில் இருந்து ஆனந்தராஜ் பேசினாராம்.
இந்த தகவலை போலீசாரிடம் சுஷ்மா கூறினார். தொடர்ந்து போலீசார் விசாரித்தபோது, சம்பவம் நடந்த அன்று, மனைவி சுஷ்மாவிடம் மது குடிக்க ஆனந்தராஜ் பணம் கேட்டிருந்தாராம். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்ற ஆனந்தராஜ், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து கும்பமேளாவுக்கு சென்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலத்தில் மனைவியிடம் கோபப்பட்டு 2000 கிமீ பயணித்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜூல் நடக்கும் கும்பமேளாவிற்கு சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications