என்று தீருமோ சாதிய கொடுமை! சேலத்தில் பட்டியலின இளைஞருக்கு முடி வெட்ட மறுப்பு.. போலீசும் உடந்தை?
சேலம்: பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கும், தனது குழந்தைக்கும் முடி திருத்தம் செய்ய சலூன் கடையை அணுகியபோது, கடைக்காரர் முடி திருத்தம் செய்ய மறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போ எல்லாம் யார் சார் சாதி பாக்குறா? என்று கேட்பவர்கள் அதிகம் உண்டு. நகரங்கள் பெருகிவிட்டபோதும் கூட சாதி பாகுபாடுகள் ஆங்காங்கே லேசாக தலைகாட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. நகரங்களிலேயே இந்த நிலைமை எனில், கிராமப்புறங்களில் இந்த சாதிய பாகுபாடுகளின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும் என நினைத்து பார்க்கவே மனம் பதறுகிறது. கிராமங்களில் இன்னமும் சாதிய பாகுபாடுகள் முற்றிலுமாக ஒழியவில்லை என்று சமீபத்திய அறிக்கைகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் காவேரிபுரத்தில் ரமேஷ் என்பவர் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் முடி வெட்ட வேண்டும் என்று கோரி கேட்டுள்ளார். ஆனால், கடைக்காரரான ரமேஷ், "வெட்டிடலாம். ஆனால், அதன் பின்னர் என்னிடம் யாரும் முடி வெட்ட வர மாட்டார்கள். எனவே என் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டுவிடாதீர்கள்" என்று கூறி முடி வெட்ட மறுத்திருக்கிறார்.
அதேபோல பக்கத்தில் உள்ள மற்றொரு கடையிலும் இளைஞர் போய் கேட்டபோது, "என் பிழைப்பில் கை வைக்காதீர்கள். இது தொடர்பாக புகார் கூட கொடுத்துக்கொள்ளுங்கள்" என்றும் கூறியிருக்கிறார். இவை அனைத்தும் இளைஞரின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தான் எதிர்கொண்ட வன்கொடுமை குறித்து சேலம் மாவட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மரியமுத்துவிடம் இளைஞர் புகார் அளித்திருக்கிறார். புகார் குறித்து டிஎஸ்பி மரியமுத்துவை இளைஞர் தொடர்பு கொண்டபோது, "முடி வெட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டால் வேறு கடையை பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே! கடை வைத்திருக்கும் நபர் உங்களுக்கு முடி வெட்டுவதன் மூலம் ஏதேனும் பிரச்னை வரலாம் என்று அச்சப்பட்டு, அதை தவிர்த்தால் வேறு கடையில் வெட்டிக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
இதற்கு பாதிக்கப்பட்ட இளைஞர், "எத்தனை காலத்திற்கு சார் இப்படியே இருப்பது? 10 முறை அவரிடம் கேட்டிருக்கிறேன் சார். ஆனால் முடி வெட்டவே முடியாது என்று சொல்லிவிட்டார்" என்று கூற, அதற்கு டிஎஸ்பி மரியமுத்து, "வெட்டமுடியவில்லை எனில் வந்துவிட வேண்டியதுதானே" என்று கூறியுள்ளார். இது தொடர்பான ஆடியோவும், சலூன் கடைக்காரர் முடி திருத்த முடியாது என்று கூறிய வீடியோவும் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. சமூகநீதி, சம வாய்ப்பை நோக்கி அரசு நகர்த்துக்கொண்டிருக்கையில், காவேரிபுரம் போன்ற கிராமங்களில் இன்னும் தீண்டாமை இருக்கத்தான் செய்கிறது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டத்தில் கூலி வேலைக்கு சென்ற விவசாயிகளுக்கு தேங்காய் சிரட்டையில் டீ கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் இருவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதன் சலசலப்பு ஓய்வதற்குள் மற்றொரு மாவட்டத்தில் வேறு ஒரு விதத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications