அலப்பறைக்கு அளவேயில்லை... 234 தொகுதிகளிலும் ஆலோசனை... தியாகத் தலைவி சின்னம்மா பேரவை ஜரூர்..!
சேலம்: சசிகலாவை மையமாக வைத்து கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் ஆடுபுலி ஆட்டங்கள் அரங்கேறி வரும் நிலையில், அவரது பெயரில் பேரவை தொடங்கியுள்ளவர்கள் ஆலோசனை கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர்.
Recommended Video
சசிகலாவின் கரத்தை வலுப்படுத்துவோம், 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளை சந்தித்து சசிகலாவுக்கு பக்கபலமாக நிற்பது குறித்து ஆலோசிப்போம் என அவர்கள் பங்குக்கு பேட்டிகள் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
மொத்தத்தில் என்னை வைத்து காமெடி கீமடி பண்ணலயே என நடிகர் வடிவேல் கூறும் வசனத்தை போல் சசிகலாவை வைத்து அரசியல் செய்பவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

ஆலோசனை
சசிகலாவின் தீவிர ஆதரவாளரான புல்லட் குமார் என்பவர் கடந்தாண்டு தியாகத்தலைவி சின்னம்மா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கினார். இதற்கும் சசிகலாவுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அதிமுகவின் கரைவேட்டியோடு அந்த அமைப்பினர் சசிகலா அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது கூடிப்பேசி வந்தனர்.

அரசியல் பயணம்
இந்நிலையில் வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் சசிகலா தனது அரசியல் 2.0 இன்னிங்ஸை தொடங்கவிருப்பதாக தகவல் உலா வரும் நிலையில், சேலத்தில் தியாகத்தலைவி சின்னம்மா பேரவை அமைப்பு சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சசிகலாவின் அரசியல் ரீ என்ட்ரியை ஆவலோடு எதிர்பார்ப்பதாக கூறிய அந்த பேரவையின் நிர்வாகிகள், சசிகலாவுக்கு உறுதுணையாக அவரது அரசியல் பயணத்திற்கு அரணாக நிற்போம் என சூளுரைத்துள்ளனர்.

அதிமுக பொன்விழா
அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை சசிகலா தலைமையில் கொண்டாட வேண்டும் என்றும் தற்போது 18 மாவட்டங்களில் வலிமையாக உள்ள சசிகலா பேரவையை விரைவில் தமிழகமெங்கும் மாவட்டந்தோறும் தோற்றுவிக்க உள்ளதாகவும் அந்தப் பேரவையின் தலைவர் புல்லட் குமார் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை அன்று பேரவை நிர்வாகிகளுடன் சென்னைக்கு திரண்டு சென்று சசிகலாவை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

சசிகலா ஆதரவாளர்கள்
இதனிடையே அதிமுகவில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள், அமமுகவினர் மற்றும் இந்த இரண்டு கட்சிகளிலும் உறுப்பினர்களாக இல்லாத சசிகலாவின் ஆதரவாளர்கள் வரும் சனிக்கிழமை அன்று சென்னையில் குவியவிருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த 4 ஆண்டுகளாக சசிகலாவை மையமாக வைத்து பல்வேறு அரசியல் களேபரங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. வரும் வாரத்தில் சசிகலாவின் அரசியல் கிளைமேக்ஸ் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications