லாரி டிரைவர் மகன் டூ ஐபிஎஸ் அதிகாரி.. சோதனைகளை சாதனையாக்கிய சேலத்து இளைஞர்.. சக்சஸ் சீக்ரெட்!
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரின் மகன் ஐபிஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், எப்படியாவது சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு கடுமையாக படித்து தற்போது ஐபிஎஸ் அதிகாரியாகியுள்ளார். தமிழ் மீடியம் தான் படித்தோம் என்பது எல்லாம் முக்கியமல்ல. கடின உழைப்பு கொடுத்தால் பாஸ் ஆகிவிடலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் ஐபிஎஸ் பதவிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகாடமியில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி பயிற்சி தொடங்குகிறது. அதில் நாடு முழுவதும் 200 பேரும், தமிழகத்தில் இருந்து 11 பேரும் கலந்து கொள்கின்றனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கலந்து கொள்கிறார். கார்த்திகேயன் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை அறிவழகன் லாரி டிரைவராக உள்ளார். தந்தையின் வருமானத்தை நம்பி தான் கார்த்திகேயன் குடும்பம் இருந்துள்ளது. இதனால், படித்து எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்ற வேட்கையுடன் கார்த்திகேயன் இருந்துள்ளார்.
12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பி.டெக் படித்துள்ளார். எப்படியாவது சிவில் சர்வீஸ் பணியில் சேர வேண்டும் என கார்த்திகேயன் ஆசைப்பட்டுள்ளார். இருந்தாலும் போதிய வசதி இல்லாததால் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்காக படித்துள்ளார்.
கார்த்திகேயனின் சகோதரர் விக்னேஷும் ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததால் குடும்ப செலவுகளை சமாளிக்க முடிந்தது. இதனால் படிப்பில் முழு கவனம் செலுத்திய கார்த்திகேயன், 2017 ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் ஐ.பி.எஸ். ஆக முடியவில்லை. அதேவேளையில், ரயில்வே துறையின் பாதுகாப்பு படையில் பணியிடம் கிடைத்தது.
இதனால், ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உதவி கமிஷனராக பணிக்கு சேர்ந்துள்ளார். பின்பு தென்னக ரெயில்வே மதுரை கோட்ட பாதுகாப்பு படையில் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் எனக்கு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதில் விடாப்பிடியாய் இருந்துள்ளார். இதனால், பணியில் இருந்து ஒன்றரை ஆண்டுகாலம் லீவ் எடுத்து மீண்டும் படிக்க ஆரம்பித்தார்.
விடுமுறையில் இருந்ததால் சம்பளம் கிடையாது. இதனால், அவரது மனைவி வேலைக்கு சென்று குடும்ப செலவுகளை கவனித்து இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேசிய அளவில் 579-வது இடமும், தமிழக அளவில் 27-வது இடமும் கிடைத்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்றதால், அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐபிஎஸ் பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
ஒருநாளைக்கு தினமும் 7 - 8 மணி நேரமும் படிப்பேன் எனவும் இப்படி தொடர்ச்சியாக படித்தால் அனைவரும் பாஸ் ஆகலாம். கிராமத்தில் இருந்து வந்தோம். தமிழ் மீடியம் தான் படித்தோம் என்பது எல்லாம் முக்கியமல்ல. நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் தான். கடின உழைப்பு கொடுத்தால் பாஸ் ஆகிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார் கார்த்திகேயன்.












Click it and Unblock the Notifications