சாரி.. சாரி.. தப்பா சொல்லிட்டேன்.. பிரஸ்மீட்டில் தவறாக பேசியதற்கு உடனே வருத்தம் தெரிவித்த எடப்பாடி
சேலம்: சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தவறான தகவலை தெரிவித்ததால் உடனடியாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார். எடப்பாடி பழனிசாமி பேட்டியில் கூறிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் கருத்து கண்டனத்திற்கு உரியது. உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நீரை முறையாக வழங்க வேண்டும். அதற்குதான் காவிரி மேலாண்மை வாரியம் உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக கொடுக்க வேண்டும். மேகதாது அணை கட்டுவது என்பது ஒருபோதும் நடக்காது" என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், " ஒரு முதல்வர் எதை பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்று தெரியாத பொம்மை முதல்வராக இருப்பவர்தான் இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின்.
எதிர்க்கட்சியாக இருந்த போது கெட்டதை கூட தைரியமாக செய்தோம் என்று முதல்வர் பேசியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முதல்வர் இப்படி பேசுவது எந்த வகையில் நியாயம். அதிமுக ஆட்சியில் இருந்த போது எந்த அளவுக்க்கு கெட்ட நோக்கத்தில் செயல்பட்டு இருக்கிறார் என்பதை ஸ்டாலினே ஒத்துக் கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம்.
ஒரே நேரத்தில் செய்ய முடியாது. குடிக்கிறவர்களை ஒரே நாளில் நிறுத்த முடியாது. படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த கடுமையான பிரசாரம் மேற்கொண்டு குடிப்பவர்களை மீட்டெடுக்க வேண்டும். அதன்படி தான் நான் முதல்வராக இருந்த போது 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை தொடர்ந்து சாதனை படைத்தது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. இதற்காக தேசிய விருது கிடைத்தது. அப்போது நிர்வாக திறமையுள்ள அரசாங்கமாக அதிமுக அரசு இருந்தது. குழந்தையின் உயிர் விலைமதிக்க முடியாதது. பெற்றோர்கள் எப்படி கனவு காண்பார்கள் என்பது மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பான சிகிச்சை அளித்தோம்.
ஏழைக்குடும்பத்தில் உள்ள மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் தகுந்த சிகிச்சை கிடைப்பது இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை" என்றார். அப்போது, குழந்தை விவகாரத்தில் சில தவறான தகவலை எடப்பாடி பழனிசாமி கூறினார். உடனே அருகில் இருந்த செம்மலை, குழந்தையின் கை மட்டும்தான் அகற்றப்பட்டு இருக்கும் தகவலை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார். உடனே சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, சாரி.. சாரி.. தவறாக சொல்லிவிட்டேன்..
அதை திருத்திக் கொள்கிறேன். தவறாக சொல்லியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. கையை இழந்த குழந்தை எவ்வளவு கஷ்டப்படும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே, உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஆட்சியாளர்கள் அறிவுறுத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications