தனியரசு கூடாரத்தை கலைக்கும் எடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் இணைந்த கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள்!
சேலம்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து தனியரசுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுவை பொறுத்தவரை சசிகலா ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். 2 தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு பெற்றுக் கொடுத்தவர் என்பதால் சசிகலா மீதான நன்மதிப்பை இன்று வரை வெளிப்படுத்தி வருகிறார் தனியரசு.

இதனிடையே தனியரசுவை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து முன்னெடுத்து வந்த நிலையில் தனியரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனியரசுவின் கூடாரத்தை ஆட்டம் காண வைக்கும் வகையில் கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகளை கொத்து கொத்தாக அதிமுக பக்கம் அழைத்து வந்து சேலத்தில் இன்று இணைப்பு விழாவையும் நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் ஏற்பாட்டில் இந்த இணைப்பு விழா வைபவம் நடந்துள்ளது. அதில் பேசிய கொங்கு இளைஞர் பேரவை முன்னாள் நிர்வாகி ஒருவர், தனியரசுவை நம்பிச் சென்றதற்கு தங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் அல்வா மட்டுமே கொடுத்திருக்கிறார் எனவும் குமுறினார். சின்னம்மா என்றும் ஓ.பன்னீர்செல்வம் என்றும் இன்னும் பேசிக்கொண்டிருக்கும் அவர், தன்னை நம்பி வந்த இளைஞர்களுக்கு என்ன செய்திருக்கிறார் என வினவினார்.
அதேபோல் இணைப்பு விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொங்கு இளைஞர் பேரவையிலிருந்து அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்றதுடன் கட்சிப்பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். தனியரசுவை விமர்சித்து பேசுவதை என்னக் காரணத்தினாலோ எடப்பாடி பழனிசாமி தவிர்த்ததுடன் திமுகவை மட்டும் விமர்சித்தார்.
தங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை அதிமுக பக்கம் அழைத்துச் சென்ற மாஜி அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் மீது தனியரசு தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு நாட்களில் பிரஸ்மீட் வைத்து எடப்பாடி பழனிசாமி மீதான தனது கோபத்தை தனியரசு கொட்டித் தீர்க்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications