மேற்கு மண்டலத்தில் சிறப்பு கவனம் செலுத்தும் தமிழக அரசு.. நேரடியாக களமிறங்கிய தலைமை செயலாளர் இறையன்பு
சேலம்: சேலம், ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
எனவே மேற்கு மண்டலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறது.

தலைமை செயலாளர் ஆலோசனை
இந்த நிலையில் சேலம், ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகள் குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலர் ஜெகநாதன் மற்றும் இரு மாவட்டங்களின் கலெக்டர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

காரணம் என்ன?
கடந்த 10 நாட்களாக சேலம், ஈரோடு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதுவரை இங்கு எடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினார்கள்.

அதிகாரிகளுக்கு உத்தரவு
மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ளதோ அதற்கான காரணத்தை கண்டறிந்து அந்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வீடு, வீடாக பரிசோதனை
மேலும் வீடு, வீடாக ஆய்வு செய்து நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் நோய் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து உயிரிழப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனைகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications