மூன்று எழுத்தில் மாநிலங்களின் மூச்சை அடைக்கும் மத்திய அரசின் GST: அமைச்சர் தங்கம் தென்னரசு விளாசல்!
சேலம்: மூன்று எழுத்தில் மாநிலங்களின் மூச்சை அடைக்கும் மத்திய அரசின் GST என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக சாடியுள்ளார்.
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிப்பு என்ற தலைப்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு தமது பேச்சில், மூன்று எழுத்தில் நமது மூச்சை அடைக்கிற சொல் என்றால் அது GST. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு வரிப்பகிர்வாக 6.5 லட்சம் கோடி ரூபாய் வழங்குகிறது. ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்குத் திருப்பித் தருவதோ வெறும் ரூ.2.5 லட்சம் கோடிதான்.
.2.70 லட்சம் கோடி வரிப்பகிர்வு தரும் உத்தரப் பிரதேசத்துக்கு ஒன்றிய அரசு ரூ.11 லட்சம் கோடி வழங்குகிறது. நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. லோக்சபா தேர்தல் பாரத போர்க்களமாக அமையும். இந்த போர்க்களத்தில் நமது முதலமைச்சர் எழுப்பக்கூடிய அந்த வெற்றி நாதம் சங்க நாதமாக ஒலிக்கும். உதயநிதி கையில் இருக்கக்கூடிய காண்டீபமாக அது வீறுகொண்டு எழும் என்றார்.
ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா பேசுகையில், வட இந்தியாவே நடுங்கும் அளவிற்கு இளைஞரணி மாநாடு நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த ஒற்றை நம்பிக்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். எத்தனை தலைவர்கள் வந்தாலும் அவர்கள் மதம் சாதி சார்ந்த தலைவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தலைவராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே இருப்பார். இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு நான் முதல்வன் திட்டம் உள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார் நமது முதலமைச்சர். முதலமைச்சரின் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்றார்.












Click it and Unblock the Notifications