மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படாது... அமைச்சர் காமராஜ் பேட்டி
சேலம்: குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணை ஜுன் 12-ம் தேதி திறக்க வாய்ப்பு இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் குறுவை சாகுபடியில் ஈடுபடலாம் எனவும் கூறியுள்ளார்.
மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 60 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க சாத்தியக்கூறுகள் ஏற்படும்.
ஆனால், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மேட்டுர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதே நேரம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்காக திறக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வந்தன. எனினும், கர்நாடகா தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், மேட்டூர் அணை திறக்கப்படுவது கேள்விக்குறியாகவே இருந்தது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பு இல்லை என்று பேட்டியளித்தார்.
ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் குறுவை சாகுபடியில் ஈடுபடலாம் என்று அமைச்சர் காமராஜர் கூறினார். மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதியோ அல்லது கால தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்தாண்டு, ஒரு மாத காலம் தாமதமாக ஜூலை 19-ந் தேதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.