ஏற்காடு தம்பதி கொலை வழக்கு.. 3 பேர் கைது.. காரணம் என்ன.. விசாரணையில் பகீர்!
சேலம்: ஏற்காட்டில் வடமாநில தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஏற்காட்டில் ஒரு எஸ்டேட்டில் ஜார்க்கண்ட் மாநிலம் கூட்டி கிராமத்தைச் சேர்ந்த கோண்டாபகன் (41). அவரது மனைவி கதிகேன்ஸ் (36). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
இவர்கள் அங்குள்ள பணியாளர் குடியிருப்பில் தங்கியிருந்தனர். கடந்த 29-ஆம் தேதி இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு இருந்தனர். இதுகுறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலையாளி
சேலம் துணை காவல் கண்காணிப்பாளர் உமா சங்கர், ஏற்காடு ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

சுங்கச்சாவடி
இந்த நிலையில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள சுங்கச் சாவடி அருகில் சந்தேகத்தின் பேரில் இருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் தம்பதி கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் சுக்ராம் (21) என தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக ராம்நாத், முச்சுராய் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

பூத்ரான்
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் ஏற்காட்டில் குடியிருந்து கூலி வேலை பார்த்து வந்தனர். கைதான 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக பூத்ரான், ஹைரா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து மற்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தியதில் தேடப்பட்டுவரும் பூத்ரான், கொலை செய்யப்பட்ட கதிகேன்ஸின் உறவினர் ஆவார்.

கர்ப்பிணி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூத்ரான் மனைவி கர்ப்பமாக இருந்தார். அப்போது கதிகேன்ஸ், பூத்ரான் மனைவியை பார்க்க அவருடைய வீட்டுக்கு வந்தார். பின்னர் பூத்ரான் மனைவிக்கு குழந்தை பிறக்க கதிகேன்ஸ் நாட்டு மருந்து கொடுத்துள்ளார். அந்த மருந்தை சாப்பிட்ட மறுநாள் பூத்ரான் மனைவி இறந்தார்.

விசாரணை
அந்த மருத்தை கொடுத்ததால்தான் மனைவி இறந்ததற்கு காரணம் என்று பூத்ரான் ஆத்திரம் அடைந்தார். இதனால் உறவினர்களுடன் சேர்த்து திட்டம் தீட்டி கோண்டாபகன், மனைவி கதிகேன்ஸ் ஆகியோரை வீட்டில் வைத்து கொலை செய்துள்ளனர். போலீஸார் விசாரணையில் தகவல்கள் தெரியவந்தன.












Click it and Unblock the Notifications