நிதி மோசடி.. பாதிக்கப்பட்ட பெண்கள் அடுத்தடுத்து பலி.. மோசடி பேர்வழி சிவக்குமார் விரைவில் கைது!
Recommended Video
சேலம்: சேலத்தில் முதலீடு செய்த பணம் ஏமாற்றப்பட்ட விரக்தியில் 3 சகோதரிகள் விஷம் குடித்து அடுத்தடுத்து இறந்த விவகாரத்தில் மோசடி மன்னன் வின்ஸ்டார் சிவக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அழகேசன். கூட்டுறவு மில் தொழிலாளி. மில் மூடப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இவருக்கு 5 மகள்கள். இதில் 2 பேருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களது தாய் இறந்துவிட்டார். அழகேசனின் 3-ஆவது மகள் மேனகாவுக்கு (33) திருமணம் செய்து வைக்க மற்ற சகோதரிகளான ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
சேலம் மருத்துவமனை
திருமணத்துக்கு ஒரு நாளுக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு இவர்கள் மூவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேனகா இறப்பு
முதலில் திருமண ஏற்பாடுகளை கவனிக்காததற்கு தந்தை திட்டியதால் தூக்கிட்டு கொண்டதாக தகவல் பரவியது. மேல் சிகிச்சைக்காக அவர்கள் மூவரும் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் செப்டம்பர் 28-ஆம் தேதி மணப்பெண்ணான மேனகா இறந்துவிட்டார்.
தற்கொலைக்கு முயற்சி
ரேவதிக்கும் கலைமகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது உறவினர்கள் அவர்கள் இருவரிடமும் தற்கொலைக்கான காரணத்தை கேட்டனர். அப்போது அவர்கள் வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் ஏமாற்றப்பட்டதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினர்.
வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு
அதாவது ரேவதி வின்ஸ்டார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணம் ஒரே ஆண்டில் இரட்டிப்பாகும் என்று வின்ஸ்டார் நிறுவனர் சிவக்குமார் தெரிவித்தார். இதை நம்பி ஏராளமானோர் பணம் கட்டினர். ரேவதியும் தனது மூத்த அக்காள் காந்திமதி மற்றும் உறவினர்களிடம் ரூ15 லட்சம் பெற்று வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
தர மறுத்த சிவக்குமார்
முதலீட்டு பணம் ரூ.100 கோடியானவுடன் சிவக்குமார் சொன்னபடி யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. அப்போது தனது சகோதரியின் திருமணம் நடைபெறவுள்ளதால் தாங்கள் செலுத்திய பணத்தை ரேவதி திருப்பி கேட்டார். அதற்கு சிவக்குமார் தரவே முடியாது என்று மறுத்துவிட்டார்.
விரக்தி
மீண்டும் சிவக்குமாரை சந்தித்த ரேவதி, பணம் தராவிட்டால் கல்யாணம் நின்றுவிடும், நாங்கள் செத்து போக வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறினார். அதற்கு சிவக்குமாரோ செத்து போனாலும் கவலையில்லை என்று தெரிவித்தார். இதனால் மனமுடைந்த சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றனர். இந்த விவரங்களை கைப்பட எழுதி அம்மாபேட்டை போலீஸில் புகாராக அளித்தனர். எனினும் போலீஸாரோ தந்தை திட்டியதால்தான் தற்கொலைக்கு முயன்றனர் என வழக்கு பதிவு செய்தனர். இதனால் ரேவதி விரக்தி அடைந்தார்.
போராட்டம்
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கலைமகளும் இறந்துவிட்டார். நன்றாக இருந்த பெண் இறந்துவிட்டாரே என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ரூ.4 லட்சம் செலுத்திவிட்டு சடலத்தை கொண்டு போகுமாறு மருத்துவமனை தெரிவித்தது. போராட்டத்துக்கு பிறகு மருத்துவமனை கட்டணத்தை செலுத்த வேண்டாம் சடலத்தை எடுத்துச் செல்லுங்கள் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அடுத்தடுத்து இரு பெண்களும் இறந்ததால் அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவக்குமாரை கைது செய்ய தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.