மாதம் ரூ.15 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. ரூ.6 கோடி சம்பள வேலையை அசால்ட்டாக உதறிய கணவன்!
சிங்கப்பூர்: திருமண முறிவுக்கு பின்னர், மனைவிக்கு மாதம் ரூ.15 லட்சம் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என்கிற நிலை எழுந்ததால், ரூ.6 கோடி சம்பளத்திலான வேலையை கணவர் ரிசைன் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் விழா அவ்வளவுதான். திருமணம் மூலம் இரண்டு குடும்பங்கள் இணைய வேண்டும், சொத்து வேண்டும், வரதட்சணை வேண்டும் என்று கேட்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தனை காலமாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஆண்கள், தற்போது ஜீவனாம்சம் எனும் புதிய பிரச்சனையை எதிர்க்கொண்டிருக்கின்றனர்.

சிங்கப்பூரில் நடந்த சம்பவம்
சிங்கப்பூரில் அதிக ஊதியத்துடன் பணிபுரிந்த கனடா நாட்டவர் ஒருவர், பிரிந்து வாழும் மனைவி ஜீவனாம்சம் கோரியதால், பணியைத் துறந்து கடந்த 2023ம் ஆண்டு சொந்த நாட்டுக்குத் திரும்பினார். தற்போது, சிங்கப்பூர் குடும்ப நீதிமன்றம் அவருக்கு தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்காக ரூ.3.9 கோடியை ஜீவனாம்சமாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
சம்பளம் இதுதான்
ஜீவனாம்சம் தவிர்ப்பதற்கே கணவர் லாபகரமான வேலையை ராஜினாமா செய்ததாக மனைவியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவரது ராஜினாமா நிதிப் பொறுப்புகளிலிருந்து அவரை விடுவிக்காது என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மட்டுமல்லாது, கனடாவில் குறைந்த சம்பளத்தில் புதிய வேலை பெறும் வரை, சிங்கப்பூரில் பெற்ற சம்பளமே அவரது வருவாய் ஈட்டும் திறனாகக் கருதப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
விஷயம் இதுதான்
கனடா நாட்டைச் சேர்ந்த இத்தம்பதிகள் 2013ம் ஆண்டு, நான்கு குழந்தைகளுடன் சிங்கப்பூருக்குக் குடியேறினர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் சிங்கப்பூர் அலுவலகத்தில் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றிய இவருக்கு, வெளிநாட்டு ஊழியர்களுக்கான தாராளமான சலுகைகள் கிடைத்தன. 2023 ஆம் ஆண்டில், இவரது ஆண்டு வருமானம் ரூ.6 கோடியாக இருந்தது.
வேறு ஒரு பெண்ணுடன் வாழ்க்கை
மனைவி சார்பாளர் விசாவில் சிங்கப்பூரில் குடும்பத் தலைவியாக இருந்தார். அவர்களது குழந்தைகள் சர்வதேசப் பள்ளிகளில் படித்தனர். வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் நன்றாக போய்க்கொண்டிருந்தால் ஆண்களுக்கு பிடிக்காதே. இந்த சம்பவத்திலும் இதேதான் நடந்தது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய இவர், வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.
பிரிவுக்குப் பின், கணவர் முதலில் மாதம் ரூ.15.5 லட்சத்தை ஜீவனாம்சமாக, வாடகை, பள்ளி கட்டணம், போக்குவரத்துச் செலவுகளுடன் வழங்க முன்வந்தார். பின் இத்தொகை மாதம் ரூ.7.7 லட்சமாக குறைக்கப்பட்டது. ஜீவனாம்சம் குறைந்ததால், அதை உயர்த்தி தர கோரி மனைவி நீதிமன்றத்தை நாடினார்.
கல்வியும், சுகாதாரமும்
நீதிமன்றத்தில் பதிலளித்த கணவர், கனடாவில் கல்வி இலவசம், எனவே அங்கு புலம் பெயர்ந்துக்கொள்ள கூறியிருந்தார். ஆனால், பொதுக் கல்வி மட்டுமே இலவசம் என்றும், கனடாவில் தனியார் பள்ளி கட்டணங்கள் சிங்கப்பூரின் சர்வதேசப் பள்ளி கட்டணங்களுக்குச் சமமானவை என்றும் மனைவி மறுத்தார். எனவே மாதம் ரூ.15 லட்சம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று மனைவி கோரினார். இதனால் டென்ஷனான கணவர், தனது வேலையை ராஜினாமா செய்தார்.
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மட்டுமல்லாது அடுத்த ஆண்டே சிங்கப்பூரை விட்டு வெளியேறி கனடா திரும்பினார். 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், இன்று வரை இவர் ஜீவனாம்சம் செலுத்தவில்லை. இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், மனைவிக்கு ஜீவனாம்சம் செலுத்த பயந்துதான் வேலையை உதறியுள்ளதாகவும், எனவே நிலுவையில் உள்ள மொத்த தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications