பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உற்சாக வரவேற்பு! 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
சிங்கப்பூர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று அரசு முறைப்படியான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 5-வது முறையாக சிங்கப்பூர் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின் போது இருநாடுகளிடையே செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். புருனே நாடு 1984-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. இதன் பின்னர் 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை. இந்த பயணத்தின் போது புருனே சுல்தானுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. பின்னர் புருனே தலைநகருக்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமான சேவை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

புருனே பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்று சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றடைந்தார். பிரதமர் மோடி, சிங்கப்பூர் நாட்டுக்கு 5-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

இன்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு அரசு முறையிலான வரவேற்பளிக்கப்பட்டது. இதன் பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்- பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மொத்தம் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்பப் பகிர்வு, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி, செமி கண்டக்டர் துறை உள்ளிட்டவை தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனையடுத்து சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் தோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார். இன்றுடன் பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கப்பூர் பயணம் நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications