சிங்கப்பூர் முஸ்தஃபா சென்டரில் ஆட்குறைப்பு- இந்தியா உட்பட வெளிநாடு ஊழியர்களை திருப்பி அனுப்ப முடிவு!
சிங்கப்பூர்: கொரோனாவால் சிங்கப்பூரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் பணிபுரியும் முஸ்தஃபா சென்டரின் வர்த்தகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு ஊழியர்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக முஸ்தஃபா சென்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முஸ்தஃபா சென்டர் ஊழியர்களுக்கு அந்த குழுமத்தின் நிர்வாக இயக்குநர் முஸ்தாக் அகமது கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வர்த்தகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிச் சீட்டை புதுப்பிக்க இயலாது.

அதேநேரத்தில் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கான விமான கட்டணத்தை நிர்வாகம் செலுத்தும். வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்கு 1 மாத அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய நிலைமை உருவானதற்கு முஸ்தாக் அகமது வருத்தமும் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே கொரோனா லாக்டவுனால் ஜூன் மாதம் முதல் பணிக்கு வரவழைக்கப்படாத ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையையும் முஸ்தஃபா நிறுவனம் வழங்கியும் வந்தது. இது அக்டோபர் முதல் வழங்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே முஸ்தஃபா சென்டரில் பணியாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்குவது தொடர்பாக அந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாக சிங்கப்பூர் தொழிற்சங்கம் அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications