"போலி போலீஸ்".. சென்னை டூ காரைக்குடி.. ஓவர் நைட்டில் கோடிக்கணக்கில் நகை, பணம் வழிப்பறி.. ஷாக் சம்பவம்
சென்னையிலிருந்து காரைக்குடிக்கு சென்ற நகை வியாபாரியிடம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை: சென்னையிலிருந்து காரைக்குடிக்கு பேருந்தில் சென்ற நகை வியாபாரியிடமிருந்து ரூ.2.5 கோடி பணம் மற்றும் நகை நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை காரைக்குடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். நகை வியாபாரியான இவர் ஒரு இடத்திலிருந்து 'பல்க்காக' நகைகளை கொள்முதல் செய்து, இன்னொரு இடத்தில் விற்பனை செய்து வருகிறார். இதில் கிடைக்கும் தரகு லாபத்தை கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வந்திருக்கிறார். இந்நிலையில், வழக்கம்போல இரண்டு தினங்களுக்கு முன்னர் நகைகளை கொள்முதல் செய்ய சென்னைக்கு வந்திருக்கிறார். இரண்டு நாட்கள் சென்னையிலேயே தங்கி தேவையான நகைகளையும் ஆர்டர் செய்துள்ளார்.
ஆர்டர் செய்த நகைகள் கிடைத்ததையடுத்து நேற்றிரவு வழக்கம்போல சென்னையிலிருந்து சுமார் 1.5 கிலோ தங்க நகைகளுடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு பேருந்தில் புறப்பட்டிருக்கிறார். இந்த நகை வாங்கியது போக ரூ.2.5 கோடி மீதம் கையில் இருந்திருக்கிறது. இந்த பணம் மற்றும் நகையுடன் கோயம்பேட்டில் ஏறிய ரவிச்சந்திரன் அதிகாலை சுமார் 4.30 மணியளவில் காரைக்குடி பேருந்து நிலையம் வந்து சேர்ந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து கழனி வாசல் பகுதியில் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது இவருக்கு எதிர்புறமாக ஒரு சொகுசு கார் வந்து நின்றிருக்கிறது.

போலீஸ்
இந்த காரிலிருந்து காக்கி பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த இரண்டு பேர் இறங்கி வந்து தாங்கள் காவலர்கள் என்றும், நீங்கள் வைத்திருக்கும் தங்க நகை மற்றும் பணத்திற்கு ஆபத்து இருக்கிறது எனவும் கூறி, காவல் நிலையம் அழைத்துச் செல்வதாக காரில் ஏற்றியிருக்கின்றனர். நன்கு ஷேவ் செய்யப்பட்ட முகம், கம்பீரமான தோற்றம் மற்றும் இத்துடன் காக்கி பேண்ட் மற்றும் வெள்ளை சட்டையை பார்த்து போலீஸ் என ஏமார்ந்து ரவிச்சந்திரன் காரில் ஏறியுள்ளார். ஆனால் கார் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி போகவில்லை. காரைக்குடி புது பஸ்டாண்ட் போலீஸ் ஸ்டேஷன், காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அழகப்பா பல்கலைக்கு பக்கத்தில் மற்றொரு போலீஸ் ஸ்டேஷன் என 3 ஸ்டேஷன்கள் இருக்கின்றன.

கடத்தல்
இதில் எந்த ஸ்டேஷன் இருக்கும் திசையிலும் கார் போகவில்லை. இதை உணர்ந்த ரவிச்சந்திரன், "எங்க போறீங்க? இந்த பக்கம் எந்த ஸ்டேஷனும் கிடையாதே" என்று கேள்வியெழுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் இதற்கு பதிலளிக்கவில்லை. காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 19 கி.மீ தொலைவு கடந்து புதுக்கோட்டை எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள ஒரு புதரில் கார் நின்றுள்ளது. பின்னர் காரிலிருந்து வெளியே வந்த இருவரும் ரவிச்சந்திரனை வெளியே வரச்சொல்லி அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்து நகை, பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து உடனடியாக பறந்துள்ளனர்.

கொள்ளை
இது எல்லாம் சில நிமிடங்களில் நடந்திருக்கிறது. காயமடைந்த ரவிச்சந்திரனுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பின்னர் உடனடியாக அந்த வழியாக சென்ற ஊர் மக்களிடம் போன் வாங்கி தான் நகை சப்ளை செய்யும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு சம்பவத்தை விளக்கி கூறியுள்ளார். அதன் பின்னர்தான் வந்தது போலீஸ் இல்லை, திருடர்கள் என்பது ரவிச்சந்திரனுக்கு புரிந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரவிச்சந்திரனை மீட்டிருக்கின்றனர்.

புகார்
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி உரிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காவல்துறையினருக்கு வலியுறுத்தியுள்ளனர். போலீஸ் எனக் கூறி நகை வியாபாரியிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications