ராகுல் காந்தி தகுதிநீக்கம்.. நரேந்திர மோடி ஆட்சிக்கு கவுன்ட்டவுன் தொடங்கியது.. ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
சிவகங்கை: ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததன் மூலம், நரேந்திர மோடியின் ஆட்சிக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையானது.
மோடி பெயர் குறித்து விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துவிட்டதாக கூறி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

2 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில், ராகுல் காந்தி மீதான அவதூறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உத்தரவிட்டார். இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ராகுல் காந்தி தகுதிநீக்கம்
அத்துடன், குற்ற வழக்கில் மக்கள் பிரதிநிதி ஒருவர் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தண்டிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது பதவி பறிக்கப்படும் என்பதால், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.பாரதி பேச்சு
சிவகங்கையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத் தருவோம். 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியின் பதவியை பறித்துள்ளனர்.

கவுன்ட்டவுன் தொடக்கம்
24 மணி நேரத்தில் ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த நாடாளுமன்ற சபாநாயகர் ஏன், நான்கு ஆண்டுகளாக துணை சபாநாயகர் தேர்தலை நடத்தவில்லை. முதல்முறையாக நான்கு ஆண்டுகள் துணை சபாநாயகர் இல்லாமல் நாடாளுமன்றம் நடந்து வருகிறது. ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததன் மூலம், நரேந்திர மோடியின் ஆட்சிக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications