அஜித்குமாரின் சகோதரருக்கு விரும்பிய இடத்தில் அரசு வேலை.. ரூ. 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி உறுதி
சிவகங்கை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி சுற்றுப் பயணம்
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. அதிமுக பொதுச் செயலாளர் மக்களை சந்திப்போம் தமிழகத்தை காப்போம் எனும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்புவனத்தில் போலீஸ் காவல் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அஜித்குமார் தாயாருக்கும், சகோதரர் நவீன்குமாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல்
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மறைந்த அஜித்குமாரின் சகோதரர் மற்றும் அவரது தாயை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். இந்த சம்பவம் மிகுந்த வேதனை, வருத்தம் மற்றும் கண்டனத்திற்குரியது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையால் இன்று விலைமதிக்க முடியாத உயிரை இழந்துள்ளது வேதனையை அளிக்கிறது.
நீதி கேட்டு போராட்டம்
ஜூன் 27 ஆம் தேதி நகை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு, 28 ஆம் தேதி காவல் துறை விசாரணையில் அஜித்குமார் தாக்கப்பட்டு இறந்துள்ளார். அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறைந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
வேறு வழியின்றி கைது
அதிமுகவின் போராட்டத்தால் வேறு வழியின்றி இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வேறுவழியின்றி தாக்குதலில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்துள்ளனர். அதிமுக வழக்கறிஞர் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. அதிமுகவின் அழுத்தம், போராட்டத்தால் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது.
தாக்குதலின் பின்னணியில் அழுத்தம்
இந்த விவகாரத்தில் காவல் துறையினருக்கு வந்த அழுத்தத்தால்தான் அஜித்குமார் தாக்கப்பட்டிருக்கிறார். காவல் துறை தாக்குதலின் பின்னணியில் யாரோ அழுத்தம் கொடுத்துள்ளனர். அஜித்குமாரின் உடற்கூறு ஆய்வில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூர தாக்கல் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு முழு பொறுப்பையும் திமுக அரசுதான் ஏற்க வேண்டும்.
அரசு வேலை, நிவாரணம்
திமுக ஆட்சிக்கு வந்தபின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 20 ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுள்ளன. அதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும். அஜித்குமார் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ .5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications