மாற்றி யோசித்த மாலதி.. தங்க நகைகளை பறிக்க முயன்ற கொள்ளையர்களுக்கு சிவகங்கை ஆசிரியை தந்த பரிசு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடுரோட்டில் வழிமறித்து நகை பறிக்க முயன்ற கொள்ளையர்களை தலைதெறிக்க ஓடவிட்டிருக்கிறார் அரசு பள்ளி தலைமை ஆசிரியை.. அவரது புத்திசாலித்தனமான முயற்சியால் கொள்ளையர்களிடம் இருந்து 12 பவுன் தங்க நகை தப்பியுள்ளது. ஆபத்தான நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டதால் இன்று அவருடைய தங்க நகையை திருடர்களால் திருட முடியவில்லை..
பொதுவாக ஆபத்தான நேரத்தில் சில வினாடிகள் புத்திசாலித்தனமாக யோசித்தால், அந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாள முடியும். வாகனத்தில் செல்லும் போது, திருடர்கள் நம்மிடம் வழிபறி செய்ய வரும் போது, வீட்டில் கொள்ளையர்கள் புகும் போது, வனவிலங்குள் தாக்க வரும் போது, காட்டுப் பாதையில் பயணிக்கும் போது, மற்றும் வாழ்வில் சில சிக்கலான நிலையில், நமக்கான சூழல்கள் சாதகமாக இல்லாத நிலைகளில் பதற்றப்படாமல் மாற்றி யோசித்தால், அதை சிறப்பாக கையாள முடியும் அல்லது குறைந்தபட்சமான ஆபத்துகளை எதிர்கொண்டு தப்பிக்கவும் முடியும். அப்படித்தான் சிவகங்க அரசு பள்ளி தலைமை ஆசிரியை தப்பித்துள்ளார். அவரது புத்திசாலித்தனமான செயலால் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை காப்பாற்றி உள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஜெயராம் என்பவருடைய மனைவி மாலதி. இவர் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வாடாதிப்பட்டி பகுதியில் சென்றபோது ஹெல்மெட் அணிந்த 2 பேர் தலைமை ஆசிரியை மாலதியை வழிமறித்தனர். இதில் தடுமாறி கீழே விழுந்த அவரிடம், ஹெல்மெட் அணிந்த இரண்டு பேரும் நொடிப்பொழுதியில் நகையை பறிக்க முயன்றனர். அப்போது அவர் தானே நகையை கழட்டி தருவதாக கூறினார். இதை சற்றும் எதிர்பார்க்காத திருடர்கள்..காத்திருந்தார்கள்.. அப்போது தலைமை ஆசிரியை கனநிமிடத்தில் புத்திசாலித்தனமாக யோசித்தார். தன் கழுத்தில் இருந்த அனைத்து நகைகளையும், கழட்டி அருகில் இருந்த புதருக்குள் வீசினார்.
இதை எதிர்பார்க்காத திருடர்கள் நகையை எடுக்க வேகமாக புதரை நோக்கி சென்றுள்ளார்கள். அப்போது தலைமைஆசிரியை மாலதி, அங்கே ஆட்கள் இருப்பது போல, இங்கே 2 பேர் என்னிடம் தகராறு செய்கிறார்கள் என சத்தம் போட்டு உதவி கேட்டுள்ளார். இதை கேட்டதும் பதறிபோன கொள்ளையர்கள் தோப்பில் ஆட்கள் இருக்கிறார்கள் என கருதி அங்கிருந்து தலைதெறிக்க வேகமாக தப்பி சென்றுவிட்டார்கள்.
தனக்கு நடந்த அந்த சம்பவத்தை அப்பகுதி மக்களிடம் தலைமை ஆசிரியை மாலதி தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து தேடி பார்த்தபோது 12 பவுன் நகையை மீட்டனர். ஆசிரியையின் சாதுரியத்தால் 12 பவுன் தங்க நகை தப்பியது. இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications