கீழடி அருகே கொந்தகையில் ஒரே குழியில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டெடுப்பு.. எந்த காலத்துடையது என ஆய்வு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வின் மற்றொரு பகுதியான கொந்தகையில் ஒரே குழியில் 7 முழு வடிவ மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில், கீழடி- அகரம்- மணலூர்- கொந்தகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக இது வரை 6 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இதில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து தற்போது கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

கீழடி அகழாய்வு
கீழடி அருகே உள்ள மற்றொரு அகழாய்வு பகுதியான கொந்தகையில் நடத்தப்பட்ட முதல் கட்ட அகழாய்வின் போது கொந்தகை இடுகாட்டு பகுதியாக கண்டறியப்பட்டது. மனித எலும்புக்கூடுகள் முதுமக்கள் தாழிகள் கடந்த வருடம் கிடைத்தன.

கொந்தகையில் 2ஆம் கட்ட பணி
இதனை தொடர்ந்து இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் கொந்தகையில் 2 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி இது வரையிலும் 13 தாழிகள் கிடைத்துள்ளன. அதில் இரண்டு முதுமக்கள் தாழிகள் மற்றும் மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.

கொந்தகை அகழாய்வு
இந்நிலையில் கொந்தகை இரண்டாம் கட்ட அகழாய்வின் போது ஒரு குழியில் மேற்புறத்தில் 1 அடி ஆழத்திலே நேற்று வரை 3 எலும்புக் கூடுகள் கிடைத்தன. மேலும் அதனை தொடர்ந்து அதே குழியில் அதன் அருகே அருகே மேலும் 3 முழு வடிவ மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.

7 எலும்புகள்
இதுவரை ஒரே குழியில் 7 மனித எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதால் ஆராய்ச்சியாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. இங்கு கிடைத்த மனித எலும்புக் கூடு ஆணா ,பெண்ணா மற்றும் எத்தனை வருடம் பழமையானது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறினர்.

கீழடி அகழாய்வு
மேலும் கீழடி, அகரம் மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் உலகச்சிறப்பு வாய்ந்த நூலகம் அமையப்பட்டால் இந்த அகழாய்வு பணிகள் குறித்த விஷயங்கள் அனைவருக்கும் தெரியவரும்படி அருங்காட்சியகங்களும் வைக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications