எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தொல்லை கொடுப்பதற்காகவே இந்த பதவியா? - பாஜக மீது கி.வீரமணி காட்டம்!
அரசியல் சட்டத்தில் என்ன கூறியுள்ளதோ அதை தவிர மற்றதைச் செய்வதுதான் தமிழ்நாடு ஆளுநரின் பணியாக உள்ளது என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
சிவகங்கை : எங்கெல்லாம் எதிர்க்கட்சியின் ஆட்சிகள் வருகின்றனவோ அங்கெல்லாம் தொல்லை கொடுப்பதற்காக குறுக்கு வழியில் அரசியல் ஆயுதமாக ஆளுநர் பதவியை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.

காணாமல் போவார்கள்
அப்போது பேசிய கி.வீரமணி, "திமுக கூட்டணி, கொள்கை கூட்டணி. வடநாட்டில் அமைவது அரசியல் கூட்டணி, அது அவ்வப்போது மாறும். தமிழ்நாட்டில் எந்த ஆட்சி மாறினாலும் அடிப்படைக் கொள்கை மாறாது. அதுதான் திராவிட மாடல். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியில் அமைத்திருப்பது கூட்டணி அல்ல. கூத்து அணி. விபத்து அரசியல் நடத்தி, அதன் மூலமாக வந்தவர்கள், நிலைத்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஈரோடு தேர்தலுக்கு முன்னர் சிலர் காணாமல் போய்விட்டார்கள். ஈரோடு தேர்தல் முடிவுக்கு பின்னர் சிலர் காணாமல் போவார்கள்." எனப் பேசினார்.

நாளுக்கு நாள்
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, "இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்கிறது. நாளுக்கு நாள் சாதனைகளைச் செய்து இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் என்று ஸ்டாலின் பெயர் எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் சமூக நீதியை காப்பாற்றி வருகிறோம். இந்தியா முழுவதும் சமூக நீதி தற்போது வேகமாக பரவி வருகிறது எனத் தெரிவித்தார்.

அரசியல் ஆயுதமாக
மேலும், ஆளுநர் தொடர்பாக பேசிய கி.வீரமணி, "ஆளுநர் பதவி என்பது அண்ணா கூறியது போல ஆட்டுக்குத் தாடியை போல நாட்டுக்கு கவர்னர். ஆளுநர் தேவையில்லை. அரசியல் சட்டத்தில் என்ன கூறியுள்ளதோ அதை தவிர மற்றதைச் செய்வதுதான் தமிழ்நாடு ஆளுநரின் பணியாக உள்ளது. ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் மாளிகையாக மாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.

தொல்லை கொடுப்பதற்காகவே
எங்கெல்லாம் எதிர்க்கட்சியின் ஆட்சிகள் வருகின்றனவோ அங்கெல்லாம் தொல்லை கொடுப்பதற்காகவே குறுக்கு வழியில் அரசியல் ஆயுதமாக அரசியல் கருவியாக ஆளுநர் பயன்படுத்தப்படுவது தவறான முறை. அரசியல் சட்டத்திற்கு முரணாக உள்ள இந்த முறை தவிர்க்கப்பட வேண்டுமென்றால் ஆளுநர் பதவியே தேவையில்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications