40,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.. சிவங்கைக்கு புதிய திட்டங்கள் அறிவிப்பு
சிவகங்கை: சிவகங்கையில் இன்று 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பிறகு அந்த மாவட்டத்துக்கு புதிய திட்டங்களை அறிவித்தார். அதோடு சிவகங்கையில் மருது பாண்டியர்கள் சிலை, சீல்டு கால்வாய் பணிக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் உரிய முறையில் மக்களுக்கு சென்று சேர்கிறதா? என்பதை முதல்வர் ஸ்டாலின் களஆய்வு மூலம் பரிசோதித்து வருகிறார்.

இதற்காக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்திறங்கிய முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து காரில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றார். காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது சொந்த நிதியில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டியுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார்.
அதேபோல் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பின் மாலையில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு இரவு காரைக்குடியில் ஆதிதிராவிட மாணவிகளுக்கான விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இதையடுத்து இன்று காரைக்குடியில் இருந்து சிவங்கைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்றார். ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கவுள்ள ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி வளாகத்தில் மக்களுக்கு 40,000 நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு மருதுபாண்டியர்கள் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சீல்டு கால்வாய் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
சிவகங்கை அருகே நகரம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்குவேலி அம்பலம் சிலை மற்றும் மணி மண்டபத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‛‛திமுக தனது தேர்தல் வேளையில் கூறிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது. சிவகங்கை மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம் கட்டி தரப்படும். அதேபோல் திருப்பத்தூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும்’’ என்று அந்த மாவட்டத்துக்கு 2 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இன்று சிவகங்கை சுற்றுப்பயணத்தை முடித்து கொள்ளும் முதல்வர் அங்கிருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார். மதுரையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications