மகள்களை சந்தித்தேன்..விடுதியில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்! அதிகாரிகளுக்கு போட்ட ஆர்டர்.!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை நேரத்தில் காரைக்குடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை ருசித்துப் பார்த்த அவர், தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், அம்மாணவ. மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், காரைக்குடி, முடியரசன் சாலையிலுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அந்த விடுதியில் 62 பள்ளி மாணவிகள் தங்கியுள்ளனர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாணவிகளிடம் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், அம்மாணவிகளை நன்றாக படித்து, வாழ்வில் சிறப்பான நிலையினை அடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, விடுதியில் உள்ள சமையல் கூடம், உணவுக் கூடம், இருப்பு அறை ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவிகளுக்கு இரவு உணவாக வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி ஆகியவற்றை ருசித்து பார்த்து அதன் தரத்தினை ஆய்வு செய்தார்.
காரைக்குடி அரசு ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியில் மகள்களைச் சந்தித்தேன்!#பேரன்பு pic.twitter.com/xVHnlDeR5M
— M.K.Stalin (@mkstalin) January 21, 2025
பின்னர், விடுதி அலுவலர்களிடம், மாணவிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவினை குறித்த நேரத்தில் தவறாமல் வழங்கிட வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், மாலை நேரங்களில் மாணவிகளுக்கு விடுதி காப்பாளர்கள் பாடங்கள் கற்றுத் தருவது பாராட்டுக்குரியது என்றும், பள்ளி பாடத்துடன் பொது அறிவு தகவல்களையும் மாணவிகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்,உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்ஆஷா அஜித் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications