சிவகங்கை அருகே போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம் - வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
சிவகங்கை: சிவகங்கை அருகே திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய 6 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரணையும் மாற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது காரில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது காரை நிறுத்துவதற்கு உதவி செய்த கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அஜித் குமாரின் உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த விவகாரம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில், தாக்கியது ஏன் என அஜித்குமார் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அடித்துக் கொல்லப்பட்டவர் என்ன தீவிரவாதியா எனவும் 24 லாக்கப் மரணங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுவது குறித்து அரசு தரப்பு விளக்கம் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் திருப்புவனம் இளைஞர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக வெளிப்படையான விசாரணை உறுதிசெய்ய, தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணையும் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications