தடுப்பூசி போடும்படி.. அஞ்சல் அட்டை மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு.. அசத்தும் பள்ளி மாணவர்கள்
சிவகங்கை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி அஞ்சல் அட்டை மூலம் பெற்றோர்களுக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அனைவரும் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.

சூப்பர் விழிப்புணர்வு
அதாவது அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே அஞ்சல் அட்டை மூலம் தங்களின் சக மாணவ நண்பர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி கடிதம் எழுதினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் இணையம் வழியாகவும்,அலைபேசி வழியாகவும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு இந்த கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

தடுப்பூசி போடுவோம்
அதன்படி பள்ளி மாணவ-மாணவிகள் அஞ்சல் அட்டையில் "தடுப்பூசி போடுவோம்.கொரோனாவை தடுப்போம் இலவச தடுப்பூசியை இன்முகத்துடன் போட்டுக்கொள்வோம். அரசின் தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்துவோம் " என்ற வாசகத்தை எழுதி தங்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு செய்வது மட்டுமின்றி, தங்களது நண்பர்களின் பெற்றோர்களுக்கும் கடிதம் அனுப்பி விழிப்புர்ணர்வு செய்து வருகின்றனர்.

தடுப்பூசி போடவில்லை
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் கூறியதாவது: சமீபத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வாங்க பள்ளிக்கு வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடவில்லை என்பதை அவர்களிடம் பேசும்போது அறிந்து கொண்டேன். எனவே பள்ளி மாணவர்களின் வாயிலாகவே அவர்களின் பெற்றோர்களுக்கும், சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நானும், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் , முத்துலெட்சுமி,செல்வமீனாள் ,கருப்பையா ஆகியோரும் முடிவு செய்தோம்.

பொதுமக்கள் பாராட்டு
இதன்படிதான் மாணவர்கள் தற்போது அஞ்சல் அட்டை மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த அஞ்சல் அட்டை விழிப்புணர்வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதம். இதனை பொதுமக்களுக்கும்,பெற்றோர்களுக்கும் தெரிவிக்கவே இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications