சிவகங்கை தொகுதியை சீரியஸாக பார்க்கும் திமுக! கார்த்தி சிதம்பரம் நிலைமை சிக்கல்!
சிவகங்கை: சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என திமுகவினர் ஒரு பக்கம் கச்சைக் கட்டி நிற்கிறார்கள் என்றால் மற்றொரு பக்கம் கார்த்தி சிதம்பரத்துக்கு மட்டும் சீட் கொடுத்துவிடக் கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகளே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
வழக்கம் போல் இந்த விவகாரத்தை பார்க்காமல் சற்று சீரியஸாகவே பார்க்கத் தொடங்கியிருக்கிறது திமுக தலைமை. ஏனெனில் 'பென்' நிறுவனம் கொடுத்த ரிப்போர்டிலும் கார்த்தி சிதம்பரத்தின் செயல்பாடுகள் பற்றி அவ்வளவு திருப்திகரமாக இல்லை. ஏடாகூடமாக பேட்டி கொடுப்பது, கட்சித் தலைமையையே உதாசீனப்படுத்துவது, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அலைக்கழிப்பது என அவர் மீதான பல சர்ச்சைகள் தொடர்கின்றன.

சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கி வருகிறது திமுக. அதுபோல் இந்த முறை ஒதுக்கக் கூடாது என்பது சிவகங்கை மாவட்ட திமுகவினரின் கோரிக்கையாக உள்ளது. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன.
கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் ப.சிதம்பரம் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுவாமிநாதன், சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கின்றனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பது பரவலாக உள்ள குற்றச்சாட்டாகும்.
2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அதிமுகவை சேர்ந்த செந்தில்நாதன் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். இதனிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இனி அந்த விதியை முதல்வர் ஸ்டாலின் மாற்றி எழுதுவார் என நம்பிக்கை பொங்க எதிர்பார்க்கிறார்கள் சிவகங்கை மாவட்ட உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications