உங்களுக்கு காய்ச்சலா? "இந்த" அறிகுறிகள் இருந்தால் உடனே அட்மிட் ஆகணும்.. செய்யக் கூடாதவை எது?
சிவகங்கை: காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை எவை என்பது குறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. சில நேரங்களில் வைரஸ் காய்ச்சலாக வந்து பாடாய்படுத்தி எடுக்கிறது. குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டு அவர்களுக்கும் உடல் உபாதைகளை கொடுக்கிறது.
இதுகுறித்து மருத்துவர் பரூக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
✅ காய்ச்சல் இருப்பின் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். மருந்து கடைகளில் செட் மாத்திரை வாங்க கூடாது.
✅மூன்றாவது நாள் வரை கடும் காய்ச்சல் அடித்து , சட்டென உடல் குளிர்ந்தால் உடனே அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும்.
✅அங்கே , தங்கி சிகிச்சை பெறச் சொன்னால், உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
✅காய்ச்சல் வந்தால் தினமும் போதுமான அளவு நீரை பருக வேண்டும். ஓ.ஆர். எஸ் உப்புக்கரைசல் நீரை பருகுவது நல்லது. உணவை கஞ்சியாக குடிப்பது நல்லது.
✅சிறுநீர் கழிப்பது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் நிகழ வேண்டும். அதில் குறைபாடு இருப்பின் உடனே உள்நோயாளியாக சேர வேண்டும்.
✅மலத்தில் ரத்தம் வெளியேறுதல் / மலம் கருப்பாக செல்லுதல் , வயிற்று வலி , வாந்தி போன்ற அறிகுறிகளை கண்டறிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும்
✅கடும் ஜுரம் அடிக்கும் வேலையிலும் காய்ச்சல் விட்ட மூன்று நாட்களும் ஓய்வு கட்டாயம் தேவை.
✅ காய்ச்சல் இருப்பின் மருத்துவர் பரிந்துரையின் பேரில் பாராசிட்டமால் மாத்திரை உட்கொள்ள வேண்டும்
பாராசிட்டமால் மாத்திரையை மட்டும் உட்கொண்டு காலம் தாழ்த்தி மருத்துவமனையை நாடுவது ஆபத்தாக முடியக் கூடும். செட் மாத்திரை வாங்கி உண்பதும் தவறான செயலாகும்.
-------------
இவை எல்லாம் செய்யக் கூடாதவை:
1. மருந்து கடைகளுக்கு சென்று கவுன்ட்டரில் மாத்திரை வாங்கி உண்பது கூடாது .
2. போலி மருத்துவர்களிடமோ மருந்தகங்களிலோ சென்று ஊசி போட்டுக் கொள்வது மகா பாதகச் செயலாய் அமைய வாய்ப்புள்ளது.
போலி பரப்புரைகளை நம்பி சிகிச்சைகளை தாமதிக்க கூடாது.
3. அரசு மற்றும் பிற மருத்துவமனைகளில் உள்நோயாளியாக தங்கியிருப்போர் , மருத்துவர் அனுமதியின்றி முன்கூட்டியே மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வரக் கூடாது (டெங்கு காய்ச்சலில் , ஜுரம் விட்ட அடுத்த மூன்று நாட்கள் தான் ஆபத்தானவை என்பதை நினைவில் கொள்க)
4. கடும் ஜுரம் அடிக்கும் ஒருவர் , தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைச்சலை தவிர்க்க வேண்டும்.
5. டெங்கு நோய் ஒரு பகுதியில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தால் அந்த இடத்திற்கு இயன்றவரை பயணம் செல்வது கூடாது. குழந்தைகள் , முதியோரை அங்கு அழைத்துச் செல்ல கூடாது. உங்கள் ஊரில் டெங்கு பரவிக் கொண்டிருந்தாலோ, உங்கள் வீட்டில் யாருக்கேனும் டெங்கு
இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.