தண்ணீரை அதிகமாக குடித்தால் இறப்பா? மாரத்தான் போட்டியாளர்களே உஷார்.. டாக்டர் பரூக் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: தண்ணீர் அதிகமாக குடித்தால் இறப்பு நிச்சயமா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குறைவான கால இடைவெளியில் அதிகமாக நீர் / திரவங்கள் பருகுவது, உயிருக்கு ஆபத்தானது என்பது பல அனுபவங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளது. முற்றிலும் ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொண்டோருக்கும் தேவைக்கும் அதிகப்படியான நீர் அருந்துதல் ஆபத்தை விளைவிக்கிறது.

குறிப்பாக மாரத்தான் ஓட்டங்களில் ஈடுபடும் அமெச்யூர் மக்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலுடன் ஓடும் மாரத்தான் ரன்னர்கள்/ தொழில்முறை மாரத்தான் ரன்னர்களுக்கு தண்ணீரை எப்படி / எவ்வளவு அருந்த வேண்டும் என்றெல்லாம் விழிப்புணர்வு இருக்கும். ஆனால் அமெச்யூர் எனப்படும் தொழில்முறை அல்லாது திடீர் என்று நீண்ட தூரம் ஓட வேண்டும் அல்லது நடக்க வேண்டும் அல்லது தொடர்ந்து உடல் உழைப்பை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுமானால் அவர்கள் தண்ணீரை குறைவான கால இடைவெளிக்குள் மேலதிகமாகப் பருகிவிட வாய்ப்புண்டு.

சிறுநீரகங்கள்

சிறுநீரகங்கள்

நமது சிறுநீரகங்கள் ஒரு மணிநேரத்தில் ஒரு லிட்டர் நீரை வெளியேற்றும் சக்தி பெற்றது. இந்த வெளியேற்றும் சக்தி என்பது குழந்தைகள், சிறார்கள் , முதியோர்கள் , பல ஆண்டுகளாக நீரிழிவு/ ரத்தக்கொதிப்பு / இதய நோய் / சிறுநீரக நோய் இருப்பவர்களுக்கு குறைவாக இருக்கும். இப்படியான சூழ்நிலையில் வெயிலில் தொடர்ந்து நடக்கும் போதோ வெயிலில் வேலை செய்யப் பணிக்கப்படும் போதோ வியர்வை வழியாக நமது உடலில் இருந்து நீரும் தாது உப்புக்களும் வெளியேறிக் கொண்டே இருக்கும்.

சோடியம்

சோடியம்

குறிப்பாக ரத்தத்தில் உள்ள சோடியம் வெளியேறும். இப்படி வியர்வை வெளியேறும் போது மூளையில் உள்ள தாகத்திற்கான மையம் தூண்டப்பட்டு தாகம் எடுக்கும். தண்ணீர் அருந்துவோம். ஆனாலும் தொடர்ந்து நடக்க வேண்டியுள்ளது / தொடர்ந்து பணி புரிய வேண்டியுள்ளது எனும் காரணத்தால் தேவைக்கும் மீறி நீர் அருந்தும் சூழல் உருவாகும். இப்படியாக இரண்டு மணி நேரத்திற்குள் நான்கு லிட்டர் ஐந்து லிட்டர் தண்ணீர் அருந்தும் நிலை ஏற்பட்டு விடும்.

 ரத்தத்தில் சோடியம்

ரத்தத்தில் சோடியம்

இதன் விளைவாக ரத்தத்தில் சோடியம் அளவுகள் குறைந்து விடும். இதை ஹைப்போநாட்ரீமியா என்று குறிப்பிடுகிறோம். ரத்தத்தில் நீர் அதிகமாகி சோடியம் குறைந்தால் செல்களுக்குள் நீர் உள்சென்று செல்கள் அனைத்தும் நீரால் நிறைந்து உப்பி விடும். மூளைக்கு வெளியே நீர் சேர்ந்து சரியான நேரத்தில் சோடியம் கலந்த திரவங்களை ரத்த நாளம் வழியாக செலுத்தத் தவறினால் குமட்டல், தலைசுற்றல், வாந்தி, மயக்கம், வலிப்பு, கோமா, மரணம் வரை கொண்டு செல்லலாம்.

மரணங்கள் நிகழ்ந்தனவா

மரணங்கள் நிகழ்ந்தனவா

நிற்க... இது போன்ற மரணங்கள் நிகழ்ந்துள்ளனவா? இதைப்பற்றி ஏன் பெரிதாகப் பேசுகிறீர்கள் என்று நினைக்கலாம். இது போன்ற பல மாரத்தான் சார்ந்த மரணங்கள், குறைவான நேரத்தில் அதிகமான பீர் அருந்தும் போட்டியில் ஏற்பட்ட மரணம், குறைவான நேரத்தில் அதிகமான நீர் அருந்தும் போட்டியில் ஏற்பட்ட மரணம் என்று நிறைய மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது இது குறித்த விழிப்புணர்வு ஏன் அவசியம்? மாரத்தான் ஓட்டங்கள் குறித்தும் நீண்ட தூர ஓட்டங்கள்/ நடைபயிற்சிகள் குறித்தும் ஜிம் பயிற்சிகள் குறித்தும் நம்மிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

முறையான காட்டுதல்

முறையான காட்டுதல்

எனினும் முறையான வழிகாட்டுதல் இன்றி நமது உடலைப் பற்றிய புரிதல் இன்றி நமக்கு இருக்கும் நோய்களைப் புறம்தள்ளிவிட்டு ஆர்வ மிகுதியில் இந்த முயற்சிகளில் ஈடுபடும் போது குறைவான நேரத்தில் அதிகமான நீரை அருந்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புண்டு. மாரத்தான் போன்ற ஓட்டங்கள் / நீண்ட தூர நடைபயிற்சி / நீண்ட நேர விரத முறைகள் / ஜிம்மில் நீண்ட நேர பயிற்சியில் ஈடுபடும் மக்கள் கட்டாயம் தங்களின் இதய நலன்/ சிறுநீரக நலன் சிறப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதய நோய்

இதய நோய்

ஏற்கனவே இதய நோய் / சிறுநீரக நோய் / கல்லீரல் நோய் இருப்பவர்கள் இது போன்ற கடினமான உழைப்பைக் கோரும் பயிற்சிகளையும் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் தரும் பயிற்சிகளை மிக மிக கவனத்துடன் பார்க்க வேண்டும். மாரத்தான் வாக்கர்ஸ்/ ரன்னர்ஸ்/ வியர்வை அதிகமாக வெளியேறும் வேலை செய்பவர்கள் தண்ணீரை மட்டும் அருந்துவதை விடுத்து எலக்ட்ரோலைட் அடங்கிய திரவத்தை அருந்துவதே சிறப்பானது. உப்பு கலந்த லெமன் சாறு /உப்பு க்ளூகோஸ் கலந்த ஓ.ஆர்.எஸ் திரவத்தை பருகுவது சிறந்தது. நீண்ட நேர விரதமுறையை அவ்வப்போது கடைபிடிப்பவர்கள் கட்டாயம் தண்ணீரை மட்டும் அதிகமாக அருந்தி வயிற்றை நிரப்புவதும் ஆபத்துதான்.

உப்பு கலந்த நீர்

உப்பு கலந்த நீர்

இவர்கள் உப்பு கலந்த நீரை அவ்வப்போது அருந்துவது உடலின் சோடியம் அளவுகளை தக்க வைக்க உதவும். இதய நோய்/ சிறுநீரக நோய்/ கல்லீரல் நோய் / நீரிழிவு / ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள் கட்டாயம். அவரவர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எவ்வளவு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதைக் கேட்டறிந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஜிம் பயிற்சியில் முறையான பயிற்றுவிப்பாளரிடம் தங்களின் நோய்களைக் குறிப்பிட்டு அதற்குரிய பயிற்சிகளை மட்டும் பாதுகாப்பாக செய்தால் போதுமானது. இளைய வயதில் இருக்கும் ஆரோக்கியமான நபர் செய்யும் விசயங்கள் அனைத்தையும் தானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு உரிய வழிகாட்டுதல் இன்றி அத்தகைய பயிற்சிகளில் ஈடுபடுவது தவறு. ஆபத்து.

உடலின் ஆரோக்கியம்

உடலின் ஆரோக்கியம்

உங்களின் உடலின் ஆரோக்கியம் அறிந்து அதன் தன்மை அறிந்து ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளுக்கு மதிப்பளித்து முறையான வழிகாட்டுதல் நிபுணர்களின் துணையோடு மேற்சொன்ன பயிற்சிகளை செய்வது சிறந்தது. இதுவரை தண்ணீர் அதிகமாகப் பருகி இறந்தவர்கள் குறித்த செய்திகள் இது சாதாரண விசயம் அன்று என்பது புலப்படும். இந்த விழிப்புணர்வால் ஒருவர் உயிர் காக்கப்பட்டாலும் நன்மையே. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+