Omicron symptoms: ஓமிக்ரானின் அபாய அறிகுறிகள் என்னென்ன.. விளக்கும் சிவகங்கை அரசு மருத்துவர்!
சிவகங்கை: ஓமிக்ரான் வேரியண்ட்டின் அபாய அறிகுறிகள் என்னென்ன, எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய வகையினர் குறித்த விவரங்களை சிவகங்கை மாவட்ட அரசு பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறுகையில் ஓமிக்ரான் தொற்று பெரும்பான்மையினருக்கு அதீத காய்ச்சல், உடல் சோர்வு , உடல் வலியை சில நாட்கள் ஏற்படுத்தி குணமாகிறது. இதை MILD DISEASE என்கிறோம்.
தொற்றுக்குள்ளானோரில் பலருக்கு தொற்று குணமாகியும் சில வாரங்களுக்கு
மூக்கடைப்பு
நுகர்தல் திறன் குறைபாடு
சுவைத்தல் திறன் குறைபாடு
உடல் அசதி
உடல் சோர்வு
போன்றவற்றை தொடர் இடற்பாடாக வழங்குகிறது . இதை POST COVID (கோவிடுக்கு பிந்தைய நிலை) அல்லது LONG COVID என்று அழைக்கிறோம்.

ஓமிக்ரான் அறிகுறிகள்
தற்போது இந்த அலையில் உச்சத்தை தமிழ்நாடு அடைந்துள்ள நிலையில் பலருக்கும்
- காய்ச்சல்
- தொண்டை வலி
- தொண்டை கறகறப்பு
- உடல் வலி / உடல் சோர்வு
- மூக்கடைப்பு / மூக்கு ஒழுகுதல் / தும்மல்
- தலைவலி / தலைக்கணம்
- இருமல்
போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.

இருமல்
மேற்சொன்ன அறிகுறிகளில் முக்கியமானவை
காய்ச்சலும் இருமலும் ஆகும். ஒருவருக்கு காய்ச்சலும் இருமலும் இருந்தால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கொடுப்பது சிறந்தது. பலருக்கும் சாதாரண நோயாக வந்து செல்வதால் தற்போதைய அலை குறித்த மெத்தனப்போக்கு நம்மிடையே வியாபித்து இருக்கிறது.

எச்சரிக்கை தேவை
எனினும் கீழ்காணும் மக்களிடையே இந்த நோயானது அடுத்த நிலைக்கு முற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய வகையினர். கீழ்காணும் வகையினருக்கு காய்ச்சல்/அதீத உடல் வலி மற்றும் இருமல் ஏற்பட்டால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்
- 45 வயதுக்கு மேல் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பவர்கள்
- தடுப்பூசி போடாதவர்கள்
- ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் போட்டுள்ளவர்கள்
- ரியமடாய்ட் , சோரியாசிஸ் போன்ற ஆட்டோ இம்யூன் வியாதிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைக்கும் மருந்துகள் உட்கொள்பவர்கள்
- மாற்று உறுப்புகள் பொருத்தப்பட்டவர்கள்
- புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள்
- டைப் ஒன்று நீரிழிவு நோயர்கள்
- எடை குறைபாடு / பிறவிக்குறைபாடு / ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள்
அபாய அறிகுறிகள்
- காய்ச்சல் / அதீத உடல் வலி மூன்று நாட்களுக்கு மேல் தொடர்வது
- மூச்சு விடுவதில் சிரமம் / மூச்சுத் திணறல்
/ லேசான வேலை செய்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படுவது
- ஆக்சிஜன் அளவுகள் 93% க்கு கீழ் குறைதல்
- நெஞ்சுப்பகுதியில் அழுத்த உணர்வு
- காய்ச்சல் இருமல் இருப்பவர்களுக்கு மந்த புத்தி / பிதற்றல் நிலை / தலை சுற்றல் ஏற்படுதல்
மேற்சொன்னவை அபாய அறிகுறிகள் ஆகும்.

ஓமிக்ரான் அறிகுறி
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் இருப்பது அவசியம்.
ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் பரிசோதனையில் 93% க்கு கீழ் குறைந்தால் உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும். பெரும்பான்மையினருக்கு லேசான அறிகுறிகளுடன் செல்வதால் நம்மிடையே மெத்தனப்போக்கு இருக்கிறது.
மேற்சொன்ன வகையினரில் அபாய அறிகுறிகள் தென்படுமாயின் கட்டாயம் அட்மிசன் அவசியம் என்பதை விளக்கவே இப்பதிவு என சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications