"பிரதமர் அப்படி சொல்லலையே..” இதை நிரூபிச்சிட்டா அரசியலை விட்டே விலகுறேன் - ஒரே போடாக போட்ட எச்.ராஜா!
சிவகங்கை : பிரதமர் மோடி அவ்வாறு சொன்னதாக திமுக அமைச்சர் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில், திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான் என பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் ஜூன் 20ஆம் தேதி 60 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் எச்.ராஜா.

பெட்ரோல் டீசல் விலை
சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 குறைக்கப்படும் என தி.மு.க தெரிவித்தது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 3 ரூபாய் மட்டும் குறைத்துள்ளார்கள். பா.ஜ.க ஒரு கோரிக்கை வைத்துள்ளது. தி.மு.க அதன் தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். ஜூன் 30ஆம் தேதிக்குள் தி.மு.க அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.

ஜூன் 30ல் பேரணி
பெட்ரோல், டீசல் விலையை திமுக வாக்குறுதி அளித்தபடி குறைக்காவிட்டால் ஜூன் 20ல் தமிழகத்தில் 60 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் இருப்போம். ஜூன் 30ஆம் தேதி திருச்சியில் பா.ஜ.க சார்பில் பேரணி நடத்தப்படும்.

அரசியலை விட்டே விலகுகிறேன்
அமைச்சர் பெரியகருப்பன் பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கும் பிரதமர் மோடி ரூ.15 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பிரதமர் கூறியதை புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்த முடியும் என்று தான் கூறியுள்ளார். எங்கேயாவது பிரதமர் ரூ.15 லட்சம் தருவதாக கூறியுள்ளார் என்பதை அமைச்சர் பெரியகருப்பன் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன்.

திராவிட மாடலுக்கு மாற்று
தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்து, வாக்குகளை பெறுவதற்கு பெயர் தான் திராவிட மாடல். தமிழகத்தில் பிரிவினைவாத திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான். தமிழக மக்கள் அதை புரிந்து கொண்டனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தி.மு.க அரசு ஒவ்வொரு துறையிலும் ஊழல் புரிந்து வருகிறது. இந்த ஊழல் அரசை விரட்டி அடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார் எச்.ராஜா.












Click it and Unblock the Notifications