சிவகங்கை தொகுதியை சிங்கப்பூராக மாற்றுவார் ஹெச் ராஜா… தடாலடி பிரச்சாரம்
காரைக்குடி: சிவகங்கை தொகுதியை சிங்கப்பூராக ஹெச்.ராஜா மாற்றுவார் எனக் கூறி பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளருமான ஹெச். ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
காரைக்குடி கழனி வாசலில் உள்ள ஜவுளி அம்மன் கோயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பொதுமக்களிடம் பாஜகவின் ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துக்கூறி, தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: விலைவாசி உயர்வு என்று எங்காவது , ஒரு போராட்டமாவது பாஜக ஆட்சியில் நடைபெற்றுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
விலைவாசியை பற்றி எவருமே பேச முடியாத தேர்தலாக இந்த தேர்தல் உள்ளது. முந்தைய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசில், 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட பருப்புவகைகள், இப்போது 70 ரூபாய்க்கு விற்பதாக கூறினார்.
40 ரூபாய்க்கு விற்கப்பட்ட சர்க்கரை 35 ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும், நடுத்தர, கீழ் நடுத்தர மக்கள் இந்த ஆட்சியில் மளிகை பொருட்களின் விலைவாசி உயர்வு இல்லாமல் நிம்மதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏழை, எளிய மக்கள் பாஜக ஆட்சி தொடர வேண்டும் என நினைப்பதாகவும் ஹெச். ராஜா கூறினார். மேலும், பிரச்சாரத்தின் போது, ஹெச். ராஜாவுக்கு வாக்கு சேகரித்த பாஜகவினர், சிவகங்கை தொகுதியை சிங்கப்பூராக ஹெச்.ராஜா மாற்றுவார் என்றனர்.