தலைவராக ஒரு சான்ஸ் கொடுங்க.. நான் தமிழ் சினிமா பார்க்கமாட்டேன்.. கார்த்தி சிதம்பரம் பளீர் பதில்!
சிவகங்கை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் கோஷ்டிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், தலைவர் பதவி மீதெல்லாம் தனக்கு ஆசை கிடையாது என பொய்கூற விரும்பவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படையாக பலமுறை கூறிவருவதாகவும் தெரிவித்தார்.
தாம் தமிழ் சினிமாக்கள் பார்ப்பதில்லை என்பதால் வாரிசு பட வெளியீட்டு விவகாரத்தில் என்ன பிரச்சனை என தனக்குத் தெரியாது என அவர் கூறியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகிறாரா கார்த்தி சிதம்பரம்?.. பரபரக்கும் சத்தியமூர்த்தி பவன்
கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை பொறுத்தவரை மனதில் தோன்றும் கருத்துக்களை ஒளிவுமறைவின்றி பேசக்கூடியவர். தலைமைக்கு எதிராக கூட சில நேரங்களில் கருத்துக் கூற அஞ்சாதவர். இந்நிலையில் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என சிலர் டெல்லியில் முகாமிட்டிருப்பது மட்டும் தனக்குத் தெரியும், ஆனால் அவர்களை யாரை பார்த்து என்ன பேசினார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றார்.
திமுக கூட்டணி
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாகவும் இப்போதுள்ள வலிமையைக் காட்டிலும் தேர்தல் நேரத்தில் இன்னும் வலுப்பெறக் கூடும் எனவும் தெரிவித்தார். வாரிசு பட வெளியீடு விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலையீடு உள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், நான் தமிழ் சினிமாவே பார்ப்பதில்லை, அதனால் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.
மாறுபட்ட கருத்து
நடிகர் விஜய், உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் பற்றியும் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் சாதுர்யமாக பதில் அளித்து நழுவிக்கொண்டார். இதேபோல் தமிழக அமைச்சர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட கருத்துக்களை கூறி வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு தான் இருப்பதாக கூறிய கார்த்தி சிதம்பரம் அது பற்றியும் தாம் கருத்துக் கூற எதுவுமில்லை என ஒதுங்கிக் கொண்டார்.
தலைவர் பதவி
தனக்கு இன்று இல்லவிட்டாலும் ஒரு காலத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி வரும் என நம்புவதாகவும் அவ்வாறு வரும் பட்சத்தில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதோடு மூத்த தலைவர்களையும் அணுசரித்துச் செல்வேன் எனக் கூறினார். இதேபோல் ஓபன் மெம்பர்ஷிப் மீது தனக்கு நம்பிக்கை கிடையாது எனக் கூறிய அவர், ஒரு தொகுதியில் 100 முதல் 200 பேர் வரை தான் சீரியஸாக கட்சிப் பணியாற்றுக்கிறார்கள் என்றும் அவர்களை வைத்து மட்டும் கட்சி நடத்தினால் போதுமானது எனவும் கூறியிருக்கிறார்.