மதவாதத்தை தூண்டுகிறார்.. பாஜகவின் எச் ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. சிவகங்கை போலீஸ் அதிரடி
சிவகங்கை: பாஜகவின் மூத்த தலைவராக உள்ள எச் ராஜா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதவாதத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் எச் ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக எச் ராஜா உள்ளார். கார்த்திகை தீபத்திருநாளையொட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த 4ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கு மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் இருதரப்பினர் இடையே பிரச்சனை வரும் எனக்கூறி திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
அதுமட்டுமின்றி நீதிமன்றம் கூறியதுபடி திருப்பரங்குன்றம் மலை மீதான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. இதையடுத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்டவர்கள் திருப்பரங்குன்றம் சென்றனர். போலீசாரின் நடவடிக்கையை அவர்கள் கண்டித்தனர். இதையடுத்து பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக பாஜகவின் எச் ராஜா தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு வந்தார். அப்போது கும்பக்குடி அருகே எச் ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரை மேற்கொண்டு பயணிக்க விடாமல் தடுத்தனர். இதற்கு எச் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எச் ராஜா போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் போலீசில் எச் ராஜா மீது புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது வழிப்பாதையை மறித்து பொதுமக்கள், போக்குவரத்து இடையூறு செய்தல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதவாதத்தை தூண்டும் வகையில் பேசுதல் என 3 பிரிவுகளில் எச் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications