ஊரே எச். ராஜாவை விமர்சித்தாலும்... பிரேமலதா மட்டும் எப்படி பாராட்டி பேசியிருக்கிறார் பாருங்க!
சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்தார்.
சிவகங்கை: "கேப்டன் விஜயகாந்தை போல் எச்.ராஜா ரொம்ப தைரியமானவர். மனசில் பட்டதை அப்படியே சொல்லிடுவார். ஆனா எதுக்குமே பயப்படமாட்டார்" என்று பிரேமலதா விஜயகாந்த் புகழாரம் சூட்டினார்.
தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். சில சமயங்களில் திண்டுக்கல் சீனிவானை போல எதையாவது உளறி சமாளித்தும் வருகிறார்.

இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பிரேமலதா பேசும்போது, திமுக கூட்டணியை எக்குத்தப்பாக விமர்சித்தாலும், எச்.ராஜாவை அளவுக்கு அதிகமாகவே பாராட்டினார்.
பிரேமலதா பேசும்போது, "பாஜக, தேமுதிக, அதிமுக தொண்டர்கள் எல்லாரும் பக்திமான்கள்தான். எல்லோரும் நெற்றி நிறைய விபூதி, குங்குமம் வைத்து பக்தியோடு இருப்பார்கள். எங்கே பக்தி இருக்கிறதோ, அங்கே பண்பும் இருக்கும், பணிவும் இருக்கும்.கேப்டனை போல எச்.ராஜா ரொம்பவும் தைரியமானவர்.
மனசில் பட்டதை தைரியமா பேசிடுவார். எதுக்குமே பயப்பட மாட்டார். இப்படி தைரியமாக பேசறவங்க கிட்ட உண்மை இருக்கும். அதனால ஊழல் திமுக கூட்டணியை ஒழித்துக்கட்டிவிட்டு நீங்க எல்லாரும் இவருக்கு ஓட்டு போடுங்கள்" என்றார்.
பின்னர் கடைசியாக "எங்கள் கூட்டணி வேட்பாளர் எச்.ராஜாவுக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டு போடுவீங்களா... அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்வீங்களா... சிவகங்கை தொகுதியில் தாமரை வென்றது என்ற சரித்திரத்தை படைப்பீங்களா..." என்று ஜெ. பாணியில் கேள்வி கேட்க, அதற்கு கூட்டத்தினரும் ஆமா ஆமா என்று ஆதரவாக பதில் சொன்னார்கள்.
ஆனால் எச்.ராஜாவை இவ்வளவு புகழ்ந்து தமிழக மக்கள் இப்போதுதான் பார்ப்பார்கள் போல!












Click it and Unblock the Notifications